வியாசர்பாடியில் துப்பாக்கி முனையில் பைனான்சியரை கைது செய்த ஆந்திர போலீசார்!!
வியாசர்பாடி சாஸ்திரி நகர் 6–வது தெருவை சேர்ந்தவர் ரவி. பைனான்சியர். சாஸ்திரிநகர் அண்ணா சாலையில் இவரது அலுவலகம் உள்ளது. நேற்று மதியம் அவர் அலுவலகத்தில் இருந்தபோது 2 கார்களில் சாதாரண உடை அணிந்த வாலிபர்கள் சிலர் அங்கு வந்தனர்.
அதிரடியாக அலுவலகத்துக்குள் புகுந்த அவர்கள் ரவியை வலுக்கட்டாயமாக காரில் ஏற்ற முயன்றனர். அவர் எதிர்த்ததால் துப்பாக்கி முனையில் மிரட்டி காரில் ஏற்றிச் சென்றனர்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து எம்.கே.பி.நகர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர்கள் சீனிவாசன், பாலமுரளி மற்றும் போலீசார் தங்களது வாகனத்தில் அந்த கார்களை விரட்டிச் சென்றனர்.
மூலக்கடை அருகே கார்களை மடக்கி நிறுத்தி அதில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் ஆந்திர மாநிலம் நகரியை சேர்ந்த போலீசார் மற்றும் வனத்துறையினர் என்பதும், செம்மரக்கட்டை கடத்தல் வழக்கில் பைனான்சியர் ரவியை கைது செய்து அழைத்து செல்வதும் தெரிந்தது.
இதையடுத்து நகரி போலீசார் அங்கிருந்து செல்ல அனுமதித்தனர். இச்சம்பவத்தால் சிறிது நேரம் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
Average Rating