கழுத்தை அறுத்து பெரியம்மாவை கொலை செய்த வாலிபருக்கு 10 ஆண்டு ஜெயில்!
கொருக்குப்பேட்டை, தர்மராஜா கோவில் தெருவை சேர்ந்தவர் பூராசாமி (45). அவரது மனைவி திரிபுர சுந்தரி (43). பூராசாமி–திரிபுரசுந்தரி தம்பதியருக்கு குழந்தைகள் இல்லை. எனவே திரிபுர சுந்தரி தனது தங்கை சரளாவின் மகன் சுரேஷ் (19) என்பவரை தத்து எடுத்து வளர்த்தார்.
பின்னர் கார்த்திக் என்ற மற்றொரு சிறுவனையும் திரிபுர சுந்தரி தத்து எடுத்து வளர்த்தார். இதனால் முதல் வளர்ப்பு மகனான சுரேஷ் தனது சொத்தில் பங்கு கேட்க, மற்றொருவன் வந்து விட்டானே என்று கோபம் அடைந்தான்.
இதனால் தனது பெரியம்மாவின் நடவடிக்கையில் ஆத்திரம் அடைந்த சுரேஷ் 4.6.2012 அன்று திரிபுர சுந்தரி கழுத்தை அறுத்து கொலை செய்தான். கொருக்குப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்த் வழக்குபதிவு செய்து கொலையாளி சுரேசை கைது செய்தார்.
இந்த வழக்கு மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை முடிந்ததையடுத்து நீதிபதி மீனா சதீஷ் தீர்ப்பு வழங்கினார்.
இதில் தன்னை வளர்த்த பெரியம்மாவை கொலை செய்த சுரேசுக்கு 10 அண்டு ஜெயில் தண்டனையும், 10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
அபராதம் கட்டத் தவறினால் மேலும் 6 மாதம் ஜெயில் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி தனது தீர்ப்பில் உத்தரவிட்டார்.
Average Rating