இந்து பெண்களை மதமாற்றம் செய்வதை தடுக்க வேண்டும்: விசுவ இந்து பரிஷத் மாநாட்டில் தீர்மானம்!!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத்தின் மாநில மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டிற்கு காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள் தலைமை தாங்கினார். விசுவ இந்து பரிஷத் தமிழ்நாடு அமைப்பின் ஸ்தாபகர் வேதாந்தம்ஜி முன்னிலை வகித்தார். கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் சூரி வரவேற்றார்.
மாநாட்டில் காஞ்சி சங்க ராச்சாரியார் ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள் பேசியதாவது:–
கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற பழமொழிக்கேற்ப கோவில்கள் உள்ள ஊரில் மட்டுமே குடியிருக்க வேண்டும். இந்துக்கள் அனைவரும் நாயன்மார்கள், ஆழ்வார்கள் குறித்து அறிந்து மதத்தை வளர்க்க வேண்டும். தேவாரம், திருவாசகம் ஆகிய நூல்களை படித்து திருஞான சம்பந்தர், மாணிக்கவாசகர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோர் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். அதேபோல வேறு மதத்திற்கு மாறியவர்கள் தாய் மதத்திற்கு வரவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதையடுத்து விசுவ இந்து பரிஷத் தமிழ்நாடு அமைப்பின் பொதுச் செயலாளர் ஆர்.ஆர். கோபால்ஜி தீர்மானங்கள் குறித்து விளக்கி பேசினார்.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:–
பூரண மதுவிலக்கு வேண்டும், காவிரியின் புனிதத்தை காக்க வேண்டும், விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றுவதைத் தடுக்க வேண்டும். இந்து பெண்களை நூதன முறையில் மதமாற்றம் செய்வதை தடுக்க வேண்டும், பசுவதை தடை சட்டம், மதமாற்றத் தடை சட்டத்தை கொண்டு வரவேண்டும், இந்து கோவில்களுக்கு சுய அதிகாரம் கொண்ட ஆட்சி மன்றம் தேவை, ஜாதி கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவதை தடை செய்ய வேண்டும்,
ஒரு குடும்பத்தில் ஒரு குழந்தை இருப்பதால் இந்துக்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்த நிலை நீடித்தால் இந்து மக்கள் சிறுபான்மையின மக்களாக மாறும் அவல நிலை ஏற்படும். எனவே ஒரு குடும்பத்திற்கு பஞ்ச பாண்டவர்கள்போல் 5 குழந்தைகளை இந்துக்கள் பெற்றுக் கொள்ள வேண்டும். இதனால் முதியோர் இல்லங்கள் குறையும்.
மேற்கண்ட தீர்மானங்கள் உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
Average Rating