கணவரின் சந்தேகத்தால் மனமுடைந்த இளம்பெண் தற்கொலை முயற்சி!!
கோவை வடவள்ளி மருதமலை அடிவாரத்தில் உள்ள ஐ.ஓ.பி. காலனியை சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி முருகேஸ்வரி (வயது 29). இவர் மருதமலை ஈ.பி.காலனியில் உள்ள ஒரு வீட்டுக்கு கடந்த 1 வருடமாக வீட்டு வேலைக்கு சென்று வந்தார்.
இந்த நிலையில் நடராஜனுக்கு மனைவியின் நடத்தை மீது சந்தேகம் எழுந்தது. முருகேஸ்வரிக்கும் வேறு ஒரு வாலிபருக்கும் தொடர்பு இருப்பதாக கூறி நடராஜன் மனைவியை துன்புறுத்த ஆரம்பித்தார்.
இதனால் கணவன் – மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு உருவானது. இந்த நிலையில் நாளுக்கு நாள் நடராஜனுக்கு சந்தேகம் அதிகரிக்க தொடங்கியது. ஒரு கட்டத்தில் முருகேஸ்வரியை வீட்டுக்குள் அடைத்து வைத்து வெளியே அனுப்பாமல் துன்புறுத்த ஆரம்பித்தார்.
இதனால் மனமுடைந்த முருகேஸ்வரி சம்பவத்தன்று அதிகாலை 5.30 மணியளவில் வீட்டுக்குள் இருந்த மண்ணெண்ணெய் எடுத்து உடலில் ஊற்றி தீக்குளித்தார். இதில் தீயின் வெம்மை தாங்காமல் அறைக்குள் அங்கும் இங்கும் ஓடினார்.
முருகேஸ்வரியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து முருகேஸ்வரியை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
60 சதவீதத்துக்கு மேல் தீக்காயம் உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating