கிருமாம்பாக்கம் பெண் கொலையில் துப்பு துலங்காததால் போலீசார் திணறல்!!
கிருமாம்பாக்கம் பிள்ளையார்குப்பம் பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி சாந்தகுமாரி (வயது 30), எல்.ஐ.சி. ஏஜெண்டு. இவர்களுக்கு 2 மகள்கள் இருக்கிறார்கள்.
கடந்த 22–ந் தேதி சாந்தகுமாரி வீட்டில் தனியாக இருந்தபோது மர்ம மனிதர்கள் உள்ளே புகுந்தனர். அவரை சரமாரியாக குத்தி கொலை செய்துவிட்டு 5 பவுன் நகையை பறித்துக்கொண்டு ஓடிவிட்டனர்.
இதுகுறித்து கிருமாம்பாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் சூப்பிரண்டு தெய்வசிகாமணி தலைமையில் இன்ஸ்பெக்டர் பாபுஜி, சப்–இன்ஸ்பெக்டர்கள் லெனின் பாரதி, நியூட்டன், விஜயகுமார், சிறப்பு புலனாய்வு பிரிவு சப்–இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி ஆகியோர் விசாரணை நடத்தினார்கள். நகையை கொள்ளையடிப்பதற்காக இந்த கொலை நடந்ததா? என்று முதலில் விசாரித்தனர்.
ஆனால் வீட்டில் நகையை தவிர வேறு எந்த பொருளையும் மர்ம மனிதர்கள் எடுத்து செல்லவில்லை. எனவே கொலையை திசை திருப்புவதற்காகவே நகையை எடுத்து சென்றுள்ளது தெரியவந்துள்ளது. எனவே நகைக்காக இந்த கொலை நடைபெறவில்லை என்று தெரிகிறது.
குடும்ப பிரச்சினை காரணமாக கூலிப்படையை ஏவி விட்டு இந்த கொலை நடந்ததா? என்று போலீசார் மற்றொரு கோணத்தில் விசாரித்தனர். அதிலும் சரியான தகவல் கிடைக்கவில்லை.
சாந்தகுமாரியிடம் செல்போனில் பேசியவர்கள் யார்–யார் என்று கண்காணித்து அவர்களிடம் விசாரித்தனர். அதிலும் உபயோகமான தகவல் கிடைக்கவில்லை. உள்ளூர் ரவுடிகள் உள்பட 100 பேரிடம் இதுவரை விசாரணை நடைபெற்றுள்ளது. இதில் எந்த துப்பும் துலங்கவில்லை. சாந்தகுமாரி எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்று கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் போலீசார் திணறி வருகின்றனர்.
அரியாங்குப்பத்தில் இதேபோல் கமலா என்ற பெண்ணும் கொலை செய்யப்பட்டார். இதில் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. கொலையாளிகள் யார் என்பதே மர்மமாக உள்ளது. அரசியல் தலையீடு காரணமாக குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.
தற்போது சாந்தகுமாரி கொலை செய்யப்பட்டு 6 நாட்களாகியும் துப்பு துலங்காததால் பொதுமக்களிடம் பீதி ஏற்பட்டுள்ளது. இந்த கொலையிலும் குற்றவாளிகள் பிடிபடாததற்கு அரசியல் தலையீடு காரணமா? என்று பொதுமக்கள் மத்தியில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
போலீஸ் தரப்பில் கேட்டபோது குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள் என்று தெரிவித்தனர்.
Average Rating