தென்காசி அருகே மனைவியை கொன்ற தொழிலாளி தலைமறைவு: போலீசார் தேடுதல் வேட்டை!!
நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள பெரியபிள்ளைவலசை வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் அழகுமுத்து, துணி தைக்கும் தொழிலாளி. இவரது மனைவி அன்னக்கிளி (வயது 36). இவர்களுக்கு அருண் (18) என்ற மகனும், சண்முகபிரியா (15) என்ற மகளும் உள்ளனர்.
அன்னக்கிளி தென்காசி அருகே கணக்கப்பிள்ளை வலசையை அடுத்த சுப்பிரமணியபுரத்தில் டீக்கடை நடத்தி வந்தார். மேலும் அவரது பெயரில் 30 சென்ட் நிலம் மற்றும் மாந்தோப்பு, வீடு ஒன்று உள்ளது. அதனை அழகுமுத்து தனது பெயருக்கு மாற்றி எழுதி தருமாறு மனைவியை வற்புறுத்தியுள்ளார். இது தொடர்பாக கணவன்–மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. கடந்த 24–ந்தேதி ஏற்பட்ட தகராறில் அழகுமுத்து, அன்னக்கிளியை சரமாரி தாக்கியுள்ளார். இது குறித்து அவர் போலீசில் புகார் செய்தார். போலீசார் தேடுவதை அறிந்து அழகுமுத்து தலைமறைவாகிவிட்டார்.
இந்நிலையில் நேற்று காலை அன்னக்கிளியும், அவரது மகள் சண்முகபிரியாவும் டீக்கடையை திறந்து வியாபாரத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த அழகுமுத்து திடீரென அன்னக்கிளியை அரிவாளால் சரமாரி வெட்டி விட்டு தப்பியோடிவிட்டார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார். தன் கண் எதிரே தாய் வெட்டிக்கொலை செய்யப்பட்டதை கண்டு சண்முகப்பிரியா அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்த தகவல் அறிந்ததும் தென்காசி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கொலை குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய அழகுமுத்துவை தேடி வருகின்றனர்.
Average Rating