வேலூர் அருகே ஓடும் ரெயிலில் பெண்ணிடம் செயின் பறித்த வாலிபர் கைது!!
வேலூர் தாலுகா செம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் அமுதா. போளூர் சேகரம்பட்டில் உள்ள அவரது உறவினர் வீட்டு காரிய நிகழ்ச்சிக்கு செல்வதற்காக வேலூர் கண்டோன்மென்ட் ரெயில் நிலையத்தில் இருந்து காட்பாடி–விழுப்புரம் பாசஞ்சர் ரெயிலில் ஏறி சென்றார்.
பென்னாத்தூர் ரெயில்வே கேட்டில் ரெயில் நின்ற போது அமுதாவின் அருகே இருந்த வாலிபர் ஒருவர் அமுதாவின் கழுத்தில் இருந்த 5½ பவுன் தங்க செயினை பறித்துக்கொண்டு தப்பி ஓடினான்.
அப்போது அமுதா கத்தி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த ரெயில் பயணிகள் மற்றும் அங்கிருந்தவர்கள் அந்த வாலிபரை பிடிக்க ஓடினர். அப்போது சிலர் தண்டவாளத்தின் ஓரம் இருந்த ஜல்லி கற்களை எடுத்து சரமாரியாக வீசினர். இதில் செயினை பறித்து சென்ற வாலிபர் படுகாயமடைந்து கீழே விழுந்தார்.
பயணிகள் அவரை பிடித்து காட்பாடி ரெயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
போலீசார் விசாரணை நடத்தியதில் வாலிபர் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ராஜீவ்காந்தி நகரை சேர்ந்த கார்த்திக் (27) என தெரியவந்தது.
இதையடுத்து அமுதா கொடுத்த புகாரின் பேரில் கார்த்திக்கை போலீசார் கைது செய்தனர்.
பொதுமக்கள் கல்வீசி தாக்கியதில் படுகாயமடைந்த கார்த்திக் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
Average Rating