ரெயிலில் பெண்ணிடம் 6 பவுன் தாலி செயின் பறிப்பு: வாலிபர் கைது!!
வேலூர் மாவட்டம் வாலாஜாவை சேர்ந்தவர் சரிதா (25). இவர் பெங்களூரிலிருந்து வாலாஜாவுக்கு ஜோலார்பேட்டை வழியாக சென்னை வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்று முன் தினம் இரவு பயணம் செய்தார். வழியில் ஆந்திர மாநிலம் மல்லானூர் ரயில் நிலையத்தில் சிக்னலுக்காக ரெயில் நின்றது.
அப்போது பிளாட் பாரத்தில் நின்றுக்கொண்டிருந்த வாலிபர் ஒருவர் ரெயிலில் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்திருந்த சரிதாவின் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தாலியை பறித்துக்கொண்டு தப்பி ஓடினார். இதனால் அதிர்ச்சியடைந்த சரிதா கூச்சலிட்டார்.
பிளாட் பாரத்தில் நின்று கொண்டிருந்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் மற்றும் ரெயில் பயணிகள் வாலிபரை விரட்டி மடக்கிப்பிடித்தனர். அதே ரெயிலில் அழைத்து வந்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில் ஆந்திர மாநிலம் மல்லானூர் பகுதியை சேர்ந்த சக்திவேல் (35) என்பது தெரிய வந்தது. சம்பவம் நடைபெற்ற இடம் ஆந்திர மாநிலம் என்பதால் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் சக்திவேலை ஆந்திர போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
Average Rating