சாமி கும்பிடுவதாக அழைத்துச்சென்று 17 வயது சிறுமி படுகொலை: காதலை எதிர்த்த பெற்றோர் வெறிச்செயல்!!
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் உள்ள மதனப்பள்ளி பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் இறுதியாண்டு படித்துவரும் 17 வயது மாணவி தனது வீட்டின் எதிரில் வசிக்கும் சுரேஷ் என்ற 22 வயது வாலிபரை காதலித்து வந்தார்.
தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த அந்த வாலிபரை தங்களது மகள் காதலிப்பதை ஏற்றுக்கொள்ள மறுத்த அவளது பெற்றோர், பூஜை செய்யப்போவதாக கடந்த 17-ம்தேதி அவளை அழைத்துக் கொண்டு மலைப்பகுதியில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்றனர்.
அங்கு அந்தப் பெண்ணை அடித்து, மரத்தில் தூக்குமாட்டி தொங்க விட்டனர். பின்னர், அவளது உயிர் பிரிந்தவுடன் காட்டுப்புதரில் பிணத்தை வீசிவிட்டு ஒன்றும் தெரியாததுபோல் வீராப்பள்ளி கிராமத்துக்கு திரும்பிவந்து, தங்களது மகளை காணவில்லை என்று கடந்த 22-ம்தேதி போலீசில் புகார் அளித்தனர்.
இந்நிலையில், காட்டுப்பகுதியில் ஆடு மாடு மேய்க்கச் சென்ற சிலர் புதரில் அழுகிய நிலையில் ஒரு இளம்பெண்னின் பிரேதம் கிடப்பதை பார்த்துவிட்டு போலீசில் புகார் அளித்தனர். இதனையடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில், அந்த வாலிபனை தங்கள் மகள் திருமணம் செய்து கொண்டால் குடும்ப கவுரவம் காற்றில் பறந்துவிடும் என்ற எண்ணத்தில் பெற்றோரே இந்த படுபாதகத்தை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, ஈவிரக்கமற்ற அந்த பெற்றோரை கைது செய்த போலீசார் தலைமறைவாக இருக்கும் சில உறவினர்களை தேடிவருகின்றனர்.
Average Rating