காதலியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை!!
சூளைமேட்டை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மகன் மோகன் என்ற அப்பு (22). இவர் திரைப்படக் கல்லூரியில் இயக்குனர் படிப்பு முடித்துள்ளார்.
இவருக்கும் கிண்டி வேளச்சேரி மெயின் ரோட்டில் குடியிருந்த தூரத்து உறவு பெண் ஜெயந்தி (19)–க்கும் காதல் ஏற்பட்டது. ஜெயந்தி அதே பகுதியில் உள்ள கல்லூரியில் பி.எஸ்.சி. படித்து வந்தார்.
ஏழை குடும்பத்தை சேர்ந்த ஜெயந்திக்கு மோகன் பல்வேறு உதவிகளை செய்து வந்தார். அவரது படிப்புக்கும் பண உதவி செய்தார். திருமணம் நடைபெறும் என்று உறுதியாக இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று புகைப்படங்களும் எடுத்துக் கொண்டனர். இறுதியில் காதல் ஜோடிகள் திருமணம் செய்ய முடிவு செய்து பெற்றோரிடம் தெரிவித்தனர்.
பெற்றோர்கள் விசாரித்த போது இருவரும் அண்ணன்–தங்கை உறவு என்பதால் திருமணத்திற்கு மறுத்தனர். இந்த நிலையில் ஜெயந்தி வீட்டிற்கு வந்த மோகன் வீட்டு மொட்டை மாடியில் நின்று ஜெயந்தியுடன் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது ஜெயந்தி ‘‘தனது திருமணத்திற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் உன்னுடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை திருப்பி தரும்படி’’ மோகனிடம் கேட்டார். இதில் அவர்களிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஒருவரையொருவர் அடித்துக் கொண்டனர்.
ஆத்திரம் அடைந்த மோகன் தான் கொண்டு வந்த மயக்க ஸ்பிரேயை ஜெயந்தி மீது அடித்தார். இதில் அவர் மயங்கி விழுந்தார். பின்னர் துப்பட்டாவால் அவர் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு மோகன் தப்பி ஓடிவிட்டார். இந்த சம்பவம் கடந்த 2012–ம் ஆண்டு நடந்தது.
இதுகுறித்து கிண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து மோகனை கைது செய்தனர். பின்னர் மோகன் ஜாமீனில் வெளியே வந்தார். இவர் மீதான வழக்கு ஐகோர்ட்டு மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி மீனா சதீஷ் முன்னிலையில் நடந்து வந்தது. மோகன் மீதான குற்றப்பத்திரிகையை கிண்டி இன்ஸ்பெக்டர் சரவணன் கோர்ட்டில் தாக்கல் செய்தார். நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
மோகனுக்கு ஆயுள் தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். இதையடுத்து மோகன் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
Average Rating