கோவை சரவணம்பட்டியில் பொறியியல் கல்லூரி மாணவரை கடத்தி அறையில் அடைத்து தாக்குதல்!!
கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 4–ம் ஆண்டு படித்து வருபவர் அருண் (வயது 21). இவர் சம்பவத்தன்று அதே பகுதியில் உள்ள தனியார் தொழில்நுட்ப பூங்கா அருகே தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளுடன் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார் அருண் மேல் மோதுவதுபோல் வந்து நின்றது. கண்ணிமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிளை உடைத்து சேதப்படுத்திய அந்த கும்பலை சேர்ந்தவர்கள் அருணை காரில் கடத்தி சென்றனர்.
ஒரு வீட்டில் அடைத்து வைத்து அருணை சரமாரியாக அடித்து உதைத்தனர். அவர்களின் பிடியில் இருந்து தப்பித்து அருண் கோவில் பாளையம் போலீசில் புகார் அளித்தார்.
அதில் தனது கல்லூரியில் படிக்கும் ஜூனியர் மாணவர்களான 3–ம் ஆண்டு பொறியியல் மாணவர்கள் ரமேஷ் பைசல் (23), கிரண் (23), மிதுன் (23) மற்றும் பாலவிக்னேஷ், பாலமுருகன் உள்பட 20 பேர் கொண்ட கும்பல் என்னை காரில் கடத்தி சென்று அடித்து உதைத்தனர். அவர்களிடமிருந்து நான் தப்பித்து விட்டேன். எனது மோட்டார் சைக்கிளையும் அந்த கும்பல் சேதப்படுத்தி விட்டது.
அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அருணை கடத்தி சென்ற கும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating