திசையன்விளையில் பச்சிளம் குழந்தையை ரோட்டில் வீசிய தம்பதிக்கு வலைவீச்சு: மாமியார் கைது!!
திசையன்விளை– நாங்குநேரி ரோட்டில் நந்தன்குளம் செல்லும் வழியில் ஒரு பாலம் உள்ளது. இந்த பாலத்தின் அடியில் பிறந்து சில மணிநேரம் ஆன பச்சிளம் பெண் குழந்தை ஒன்று கடந்த 28–ந் தேதி கிடந்தது.
அந்த குழந்தையை திசையன்விளை போலீசார் மீட்டு நெல்லை காப்பகத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில் பாலத்தின் அடியில் கிடந்த பெண் குழந்தை பெட்டைகுளம் தெற்கு காலனியை சேர்ந்த தீபராஜ் மனைவி சொர்ணம் (வயது 33) என்பவருடையது என்று தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கணவன்– மனைவியிடம் விசாரணை நடத்தினார்கள்.
அதில் சொர்ணத்திற்கு ஏற்கனவே 3 பெண் குழந்தைகளும், 3 ஆண் குழந்தைகளும் உள்ளனர். 7–வதாக கர்ப்பமடைந்த சொர்ணத்தை மருத்துவ பரிசோதனைக்காக தீபராஜ் திசையன்விளைக்கு அழைத்து சென்றார். அங்கு பிரசவ வலி ஏற்பட்டு அங்கேயே குழந்தை பிறந்தது. பெண் குழந்தை என்பதால் குழந்தையை பாலத்தின் அடியில் போட்டுவிட்டு சென்றதாக தெரிவித்தனர்.
இதுதொடர்பாக தீபராஜ், அவருடைய மனைவி சொர்ணம், தீபராஜ் தாய் ராஜம் ஆகிய 3 பேர் மீது திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
தலைமறைவாக இருந்த ராஜத்தை போலீசார் கைது செய்தனர். கணவன், மனைவி இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
Average Rating