தர்மபுரியில் கோவில் கும்பாபிஷேக விழாவில் 10 பெண்களிடம் நகை பறிப்பு!!
தர்மபுரி, அதியமான் கோட்டையில் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த தட்சண காசி கால பைரவர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது.
இந்த கும்பாபிஷேகத்தையொட்டி விநாயகர் பூஜை, பூர்வாங்கு பூஜை, வாஸ்து சாந்தி பூஜை, பூமா தேவிபூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன.
இன்று காலையில் 4–ம் கால பூஜை நடைபெற்றது. பின்னர் யாக சாலையில் இருந்து புனிதநீர் மேளதாளத்துடன் எடுத்துவரப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில், ஆகம ஆசிரியர் ஈசான சுந்தரமூர்த்தி சிவாச்சாரியார் கோவில் அர்ச்சகர் கிருபாகரன் குருக்கள் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார்கள். இதைதொடர்ந்து கால பைரவருக்கு மகா அபிஷேகமும், தீபாரதனையும் நடந்தது.
இந்த கும்பாபிஷேக விழாவில் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டம் அல்லாது ஆந்திரா, கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி ஒரு மர்ம கும்பல் பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்டது. மாரண்ட அள்ளி பகுதியை சேர்ந்த சித்ரா, தர்மபுரி நெடுமாறன் நகரை சேர்ந்த சகுந்தலா, கவலக்காரன் கொட்டாய் பகுதியை சேர்ந்த சபதம் உள்பட 10–க்கும் மேற்பட்ட பெண்களிடம் அவர்கள் நகைகளை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.
கும்பாபிஷேக விழா முடிந்து பெண்கள் தங்கள் கழுத்தில் கிடந்த நகைகள் காணாமல் போனதை கண்டு திடுக்கிட்டனர்.
இதுபற்றி அதியமான்கோட்டை போலீசில் நகையை பறி கொடுத்த பெண்கள் புகார் கொடுத்த வண்ணம் உள்ளனர்.
மொத்தம் 50 பவுனுக்கும் மேற்பட்ட தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்த துணிகர கொள்ளையில் பெண் திருட்டு கும்பல் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
கும்பாபிஷேகத்தின் போது அவர்கள் கூட்டத்தில் பெண்களுடன் பக்தர்கள் போல் நின்றுகொண்டு தங்கள் கைவரிசையை காட்டி உள்ளனர். கைவரிசையை காட்டிய அவர்கள் யார்? உள்ளூர் பெண்களா? அல்லது ஆந்திரா, கர்நாடகத்தை சேர்ந்த கொள்ளையடிக்கும் கும்பலா? என்பது தெரியவில்லை.
அந்த கும்பலை பிடிக்க போலீசார் தீவிரமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இச்சம்பவம் தர்மபுரியில் இன்று பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating