நண்பர் இறந்த நாளிலேயே கல்லூரி மாணவர் தற்கொலை!!
கோவை ஈச்சனாரி அருகேயுள்ள சீரபாளையம் புதூர் பகுதியை சேர்ந்தவர் கதிரேசன். இவரது மகன் விஸ்வநாத் சர்மா (வயது 21). இவர் மலுமிச்சம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் 4–ம் ஆண்டு பொறியியல் பட்டப்படிப்பு படித்து வந்தார்.
கடந்த ஆண்டு ஜனவரி 31–ந் தேதி விஸ்வநாத் சர்மாவின் நெருங்கிய நண்பர் தற்கொலை செய்து கொண்டார். இதனால் விஸ்வநாத் சர்மா மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானார். அவருக்கு தந்தை கதிரேசன் ஆறுதல் கூறி வந்தார். இந்த நிலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு கதிரேசனும் இறந்து போனார். தந்தை மற்றும் நெருங்கிய நண்பரின் சாவு விஸ்வநாத் சர்மாவை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
நேற்று சர்மாவின் நண்பரின் முதலாம் ஆண்டு நினைவு நாளாகும். இதனால் விஸ்வநாத் சர்மா கல்லூரிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். மனவருத்தத்தில் இருந்த சர்மாவுக்கு தாயார் ஆறுதல் கூறிவிட்டு வேலைக்கு சென்றார்.
ஆனால் தொடர்ந்து வருத்தத்தில் இருந்த விஸ்வநாத் சர்மா நண்பர் இறந்த நாளிலேயே தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மாலை வேலை முடிந்து வீடு திரும்பிய அவரது தாயார் கதவு உள்புறமாக பூட்டப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். சத்தம் போட்டும் விஸ்வநாத் சர்மா கதவை திறக்காததால் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது விஸ்வநாத் சர்மா தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டு இருந்தார்.
தகவலறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மதுக்கரை போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating