தேனி அருகே மூதாட்டியை கொன்று உடலை கண்மாயில் வீசிய கும்பல்!!
தேனி அருகே உள்ள கோடாங்கிபட்டி ராஜூவ்காந்தி நகரை சேர்ந்தவர் மணி. இவரது மனைவி மீனாட்சி (வயது60). தனியாக வசித்து வந்தார். கடந்த 5 நாட்களுக்கு முன் விறகு பொறுக்குவதற்காக காட்டு பகுதிக்கு சென்ற இவர் மாயமானார். அவரை உறவினர்கள் தேடி பார்த்தனர் காணவில்லை.
இந்நிலையில் சடையாள் பட்டி சாலையில் உள்ள குறுவன்குளம் கண்மாயில் ஒரு சாக்குமூட்டை மிதந்தது. அதில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அதனை பார்த்தவர்கள் கிராம நிர்வாக அதிகாரிக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர் கொடுத்த புகாரின் பேரில் பழனிசெட்டிபட்டி போலீசார் அங்கு சென்று அந்த சாக்குமூட்டையை திறந்து பார்த்தனர். அதில் துணியால் மூடி கட்டப்பட்ட நிலையில் ஒரு பெண் பிணம் இருந்தது. விசாரணையில் கோடாங்கிபட்டியில் மாயமான மீனாட்சி என்பது தெரிய வந்தது.
மர்ம நபர்கள் அவரை அடித்து கொலை செய்து சாக்குமூட்டையில் கட்டி கண்மாயில் வீசி உள்ளனர்.
அவரை நகைக்காக கடத்தி சென்று கொலை செய்தார்களா? அல்லது வேறு காரணமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக அவரது மருமகன், பேரன் மற்றும் உறவினர்களிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
போடி பகுதியில் கடந்த சில மாதங்களில் நகைக்காக 5 மூதாட்டிகள் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating