6 கிலோ தங்க கட்டிகள் கொள்ளை: நகை பட்டறை ஊழியர்களிடம் தீவிர விசாரணை!!
கோவை வெரைட்டிஹால் ரோடு பொன்னைய ராஜபுரத்தை சேர்ந்தவர்கள் வெங்கடேசன் (வயது 43), சீனிவாசன். நகைப்பட்டறை அதிபர்கள். இவர்களது நகைப்பட்டறையில் பிரகாஷ் (35), விஜயகுமார் (38) ஆகியோர் வேலை பார்த்து வருகிறார்கள்.
நகைப்பட்டறையில் ஆபரணங்கள் செய்து பல்வேறு ஊர்களில் உள்ள நகைக்கடைகளுக்கு சப்ளை செய்வார்கள். வழக்கம் போல் கடை ஊழியர்களான பிரகாஷ், விஜயகுமார் இருவரும் சென்னைக்கு நகை சப்ளை செய்ய சென்றனர்.
பின்னர் அங்கிருந்து 6 கிலோ தங்கக்கட்டிகளை வாங்கிக்கொண்டு சேரன் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் கடந்த 31–ந் தேதி காலை கோவை வந்தனர்.
அவர்கள் இருவரையும் வெங்கடேசன் தனது காரில் அழைத்துக்கொண்டு வீட்டுக்கு கிளம்பினார். கார் வீட்டின் அருகே சென்றதும் தங்கக்கட்டிகள் இருந்த 2 பைகளை எடுத்துக்கொண்டு கீழே இறங்கினார்கள்.
அப்போது மோட்டார் சைக்கிள்களில் முகத்தை துணியால் மறைத்து வந்த 4 வாலிபர்கள் அரிவாளால் வெட்டி 6 கிலோ நகைளை பறித்து கொள்ளையடித்து விட்டு தப்பினர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் போலீஸ் துணை கமிஷனர் ரம்யாபாரதி, வெரைட்டிஹால் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
வழக்குப்பதிவு செய்த போலீசார் நகைப்பட்டறையில் வேலை செய்யும் ஊழியர்கள், வேலையை விட்டு நின்ற முன்னாள் ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் கண்காணிப்பு கேமிரா பதிவு மூலம் மர்ம நபர்கள் நோட்டமிட்டுள்ளனரா? என்றும் ஆய்வு செய்கிறார்கள். நகைப்பட்டறை ஊழியர்கள் விஜயகுமார், பிரகாஷ் ஆகியோரின் செல்போன் எண்களை ஆராய்ந்து வருகிறார்கள். நகைப்பட்டறை ஊழியர்களின் நெருங்கிய நண்பர்களிடமும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் கொள்ளையர்கள் பிடிபடுவர்கள் என்று தெரிகிறது.
Average Rating