நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் குடும்பத்தினருடன் கர்ப்பிணி பெண் தர்ணா!!
நெல்லை மாவட்டம் சிங்கை சன்னதி தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகள் மீனாட்சி. இவருக்கும் குமரி மாவட்டம் மயிலாடி அருகே உள்ள ஒசர விளையை சேர்ந்த சிவதாணு என்பவருக்கும் கடந்த 25.5.2014 அன்று திருமணம் நடைபெற்றது.
சிவதாணு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் கண் டாக்டராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் மீனாட்சி தனது தந்தை சுப்பிரமணி, தாய் ராஜு பிரமு மற்றும் உறவினர்களுடன் இன்று காலை நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார்.
பின்னர் அவர் தனது கணவரை தன்னுடன் சேர்த்து வைக்க வலியுறுத்தி டீன் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து குடும்பத்தினருடன் தர்ணா போராட்டத்தில் ஈடுட்டார். இதுகுறித்து தர்ணாவில் ஈடுபட்ட மீனாட்சி கூறியதாவது:–
எனது திருமணத்தின் போது ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்களை சீர்வரிசையாக கணவர் வீட்டிற்கு கொடுத்தோம். திருமணத்திற்கு பின்பு நான் கணவரிடம் வேலைக்கு செல்கிறேன் என கூறினேன். ஆனால் அவர் வேலைக்கு செல்ல தடை விதித்து என்னுடைய நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிவதாணு ரூ.13 லட்சம் தந்தால்தான் என்னுடன் குடும்பம் நடத்துவேன் என கூறி வீட்டை விட்டு விரட்டி விட்டார்.
தற்போது 6 மாத கர்ப்பிணியாக உள்ள நான் எனது தாய் வீட்டில் வசித்து வருகிறேன். எனக்கு திருமணம் ஆன நாள் முதல் எனது கணவர் நடத்தையில் சந்தேகப்பட்டு வந்தார். என்னை பார்க்க தாய், தந்தை, உறவினர்கள் யாரும் வரக்கூடாது என தடை விதித்தார். கடைசியாக தற்போது கூடுதல் வரதட்சணையாக ரூ.13 லட்சம் கேட்டு சித்ரவதை செய்கிறார்.
கணவரின் சித்ரவதை குறித்து அம்பை மகளிர் போலீசில் புகார் செய்தேன். அப்போது போலீஸ் நிலையத்திற்கு வந்த சிவதாணு, நான் இனிமேல் என்னுடைய மனைவியுடன் எந்த பிரச்சினையும் செய்ய மாட்டேன் என எழுதி கொடுத்து விட்டு சென்றார்.
இதையடுத்து நான் கணவருடன் சேர்ந்து வாழலாம் என நினைத்து குமரிக்கு சென்றேன். ஆனால் அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உன்னுடைய கர்ப்பத்திற்கு நான் காரணம் அல்ல என என்னை அவதூறாக பேசி மீண்டும் வீட்டை விட்டு விரட்டி விட்டார். எனவே கணவரை என்னுடன் சேர்த்து வைக்கும் வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவேன் என்று கூறினார்.
டாக்டரின் மனைவி நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Average Rating