கும்மிடிப்பூண்டி அருகே தாய்–மகள் வெட்டிக்கொலை!!
கும்மிடிப்பூண்டியை அடுத்த சின்ன கோழியம் பாக்கத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு அம்பிகா (26), நிரேஷா (23) ஆகிய 2 மகள்களும், யுவராஜ் (22) என்ற மகனும் உள்ளனர்.
ராஜேந்திரன் ஏற்கனவே இறந்து விட்டார். லட்சுமி தனது சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து குடும்பத்தை நடத்தி வந்தார். அம்பிகாவுக்கு திருமணம் ஆகி விட்டது. அவர் கவரப்பேட்டை அருகே உள்ள அமிர்தமங்கலம் கிராமத்தில் கணவருடன் வசித்து வருகிறார்.
கடந்த 2012–ம் ஆண்டு கிரிக்கெட் விளையாட்டில் ஏற்பட்ட மோதலில் யுவராஜ் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக 7 பேர் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு 4 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதனால் வீட்டில் லட்சுமியும், நிரோஷாவும் மட்டுமே இருந்தனர். இன்று காலை 10 மணி வரையிலும் லட்சுமி வீட்டு கதவு திறக்கப்படவில்லை. சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டின் உள்ளே எட்டி பார்த்தனர்.
வீட்டினுள் லட்சுமியும், அவரது மகள் நிரோஷாவும் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர். அவர்களது தலையில் அரிவாளால் வெட்டப்பட்டு இருந்தது.
நள்ளிரவில் யாரோ மர்ம கும்பல் வீட்டுக்குள் புகுந்து கொலை செய்திருப்பது தெரிய வந்தது.
தகவல் கிடைத்ததும் கும்மிடிப்பூண்டி போலீசார் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். டி.எஸ்.பி. சிவலிங்கமும் நேரில் வந்து விசாரணை நடத்தினார்.
யுவராஜ் கொலையில் கைது செய்யப்பட்டவர்கள் பழிக்குப்பழி வாங்குவதற்காக இந்த கொலையை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
கொலை செய்யப்பட்ட நிரோஷா பட்டதாரி மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating