மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை: ஐகோர்ட்டு உறுதி செய்தது!!
மனைவியை வாளால் வெட்டி கொலை செய்த கணவருக்கு கீழ் கோர்ட்டு வழங்கிய ஆயுள் தண்டனையை மும்பை ஐகோர்ட்டு உறுதி செய்து உத்தரவிட்டது.
மராட்டிய மாநிலம் சோலாப்பூரை சேர்ந்தவர் ஹரிதாஸ் (வயது 51). இவர் மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு அடிக்கடி வாக்குவாதம் செய்து வந்தார். இதனால் மனமுடைந்த ஹரிதாஸ்சின் மனைவி கோபித்து கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதன்பின் ஹரிதாஸ் தனது மனைவியை அழைத்து வர அங்கு சென்றபோது மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த அவர், வாளால் மனைவியை வெட்டி கொலை செய்தார். இச்சம்பவம் கடந்த 2005-ம் ஆண்டு நடந்தது. இதுகுறித்து சோலாப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ஹரிதாசை கைது செய்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் ஹரிதாஸ் மனநிலை பாதிக்கப்பட்டவர் என அவரது தரப்பில் மும்பை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆனால் அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதை உறுதிப்படுத்துவதற்கான தகுந்த மருத்துவ சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்படவில்லை.
இந்த விசாரணையின் போதும் அவர் மீதான கொலைக் குற்றச்சாட்டு ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டது. நேற்று முன்தினம் இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது ஹரிதாசுக்கு கீழ்கோர்ட்டு வழங்கிய ஆயுள் தண்டனையை மும்பை ஐகோர்ட்டு உறுதி செய்து உத்தரவிட்டது.
Average Rating