பெண் கொடுக்க மறுத்ததால் சினிமா பாணியில் 10–ம் வகுப்பு மாணவியை காரில் கடத்திய கும்பல்!!
தேனி அருகே உள்ள தேவதானப்பட்டி ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த மாணவி ஒருவர் அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வருகிறார். பெரியகுளம் அருகே உள்ள காமாட்சிபுரத்தை சேர்ந்த மொக்கசாமி மகனுக்கு திருமணம் செய்ய அந்த மாணவியை பெண் கேட்டுள்ளனர். படித்து வருவதால் மாணவியின் பெற்றோர் பெண் கொடுக்க மறுத்துவிட்டனர்.
நேற்று பள்ளி சென்ற மாணவி மதிய இடைவேளையின்போது வெளியே வந்தார். அப்போது ஒரு காரில் காத்திருந்த 3 பேர் சினிமா பாணியில் அந்த மாணவியை கடத்திச்சென்றனர். மாணவி சத்தம் போட்டதால் அப்பகுதியில் நின்றிருந்த மாணவர்கள் சிலர் காரை விரட்டிச்சென்றனர். உடனடியாக போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். தேவதானப்பட்டி போலீசாரும் காரில் பின்தொடர்ந்தனர். கடத்தல்காரர்கள் வைகை அணை வழியாக சென்றனர். போலீசாரும் காரை விரட்டி சென்றனர். சினிமாவில் நடப்பது போன்று கார் துரத்தும் சம்பவம் நடந்தது.
இறுதியில் ஆண்டிப்பட்டி எம்.ஜி.ஆர் சிலை அருகே காரை மடக்கிபிடித்தனர். மாணவியை மீட்ட போலீசார் கடத்தல் கும்பலை சேர்ந்த மோகன், ராஜசேகர், குணசேகரன் ஆகியோரை கைது செய்தனர்.
பட்டப்பகலில் பள்ளிக்கூட வாசலில் மாணவியை கடத்திய சம்பவம் அப்பகுதியல் பரபரப்பை ஏற்படுத்தியது. கடத்தப்பட்ட ஒரு மணி நேரத்தில் மாணவியை மீட்ட போலீசாரை பொதுமக்கள் பாராட்டினர்.
Average Rating