நந்தம்பாக்கத்தில் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்: உறவினர்கள் மோதல்!!
சென்னை நந்தம்பாக்கம் ஏழுகிணறு தெருவை சேர்ந்தவர் அங்குலு இவரது மகன் அங்கையா (வயது 31). வேளச்சேரியில் ஜவுளி கடை நடத்தி வருகிறார்.
இவரும் அதே பகுதியை சேர்ந்த வினோதினி (20) என்ற பெண்ணும் 6 வருடமாக காதலித்து வந்தனர். கடந்த 6 மாதத்துக்கு முன்பு இருவரும் அலை பாயுதே சினிமா பட பாணியில் பதிவு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இருவரும் அவரவர் வீட்டுக்கு சென்று விட்டனர்.
இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் அங்கையாவுக்கு திருமணம் செய்ய அவரது பெற்றோர் பெண் பார்க்க தொடங்கினர்.
இதனால் கடந்த ஜனவரி மாதம் 26–ந்தேதி காதல் ஜோடி அங்கையாவும் வினோதினியும் ஊரைவிட்டு ஓடினர். அவர்கள் திருவேற்காடு கோவிலில் தாலி கட்டி திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு அவர்கள் ஊரை விட்டு மாயமாகி விட்டனர்.
அங்குலு தனது மகனை பல இடங்களிலும் தேடிப்பார்த்தார். ஆனால் எந்த தகவலும் இல்லை. இதனால் தனது மகன் மாயமாகிவிட்டதாக நந்தம்பாக்கம் போலீசில் புகார் செய்தார்.
இந்த நிலையில் காதல் ஜோடி அங்கையா, வினோதினி இருவரும் நேற்று மாலை நந்தம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதையறிந்த இருவரின் பெற்றோரும் 60–க்கும் மேற்பட்ட உறவினர்களும் போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். அங்கு பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது உறவினர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. அவர்களை போலீசார் சமரசப்படுத்தினார்கள்.
இதற்கிடையே அங்கையாவுடன் செல்வதில் வினோதினி உறுதியாக இருந்தார். இதையடுத்து போலீசார் காதல் ஜோடியை சேர்த்து வைத்தனர்.
Average Rating