ஆண்டிப்பட்டியில் 8 மாணவிகளிடம் அரசு பள்ளி ஆசிரியர் சில்மிஷம்!!
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள ரெங்கசமுத்திரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் செல்வகுமார்(45). இவர் 8–ம் வகுப்பு மாணவிகளிடம் தொட்டு பேசியும், கன்னத்தை தடவியும், இரட்டை அர்த்தமுள்ள வார்த்தைகளை பேசியும் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இதனை மாணவிகள் வெளியே சொல்ல அச்சப்பட்டு உள்ளனர்.
இதனிடையே தேனி மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலகு துறையின் சார்பில் ஒவ்வொரு பள்ளிகளிலும் மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தலில் இருந்து தற்காத்து கொள்வது தொடர்பான விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டு வந்தது.
ரெங்கசமுத்திரம் அரசு பள்ளியில் விழிப்புணர்வு முகாம் நடந்தபோது அங்கு வந்த அதிகாரிகளிடம் மாணவிகள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை தெரிவித்தனர். இதனையடுத்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் சிவக்குமார் பள்ளியில் விசாரணை நடத்தினார்.
மேலும் குழந்தைகள் நல ஊழியர் தன்ராஜ், மெர்லின்பாபு, ஆசிரியைகள் மிருளாளினி, சகாயசெல்வி ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டு மாணவிகளிடம் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது. இதில் ஆசிரியர் 8 மாணவிகளிடம் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது.
இதுகுறித்து ஆண்டிப்பட்டி அனைத்து மகளிர் போலீசில் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் சிவக்குமார் புகார் அளித்தார். ஆசிரியர் செல்வகுமார் தன்னை போலீசார் தேடி வருவதை அறிந்ததும் தப்பியோடிவிட்டார். போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
இதனிடையே ஆசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வாசு, கலெக்டர் வெங்கடாசலத்திடம் பரிந்துரை செய்துள்ளார்.
Average Rating