சீனியர் மாணவர்களின் ராக்கிங்கை தட்டிக்கேட்ட ஜூனியர் மாணவர் பார்வை பறிபோனது: 6 பேர் சஸ்பெண்டு!!
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஒற்றப்பாலத்தில் உள்ள அம்பலப்பரம்பை சேர்ந்தவர் முகமது மூசீன் (வயது 19). இவர் கல்லடிக்கோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
நேற்று காலை முகமது மூசீன் கல்லூரி வளாகத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அதே கல்லூரியில் பி.காம் 2–ம் ஆண்டு படிக்கும் நவ்பால், சானின், நிஷார், ஷாபின், அனிஷ், அனில் ஆகியோர் கையில் இரும்பு கம்பி மற்றும் உருட்டுக்கட்டையுடன் வந்தனர். திடீரென முகமது மூசீனை அவர்கள் சரமாரியாக தாக்கினர்.
இதில் முகமது மூசீனை இடது கண் மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் பேராசிரியர்கள் முகமது மூசீனை மீட்டு வட்டம்பலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் கண் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு முகமது மூசீனை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவரது இடது கண் பார்வை பறிபோனதாக கூறினர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த மன்னார்காடு போலீசார் விசாரணை நடத்தினர். கடந்த 6 மாதத்துக்கு முன் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்த மற்றொரு மாணவரை மேற்கண்ட மாணவர்கள் ராக்கிங் செய்ததாகவும், அதனை முகமது மூசீன் தட்டிக் கேட்டதாகவும் தெரிகிறது. அதற்கு பழிவாங்க 6 மாணவர்கள் சேர்ந்து முகமது மூசீனை தாக்கியது தெரிய வந்தது. இதனையடுத்து 6 மாணவர்களையும் கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்டு செய்துள்ளது. மன்னார் காடு போலீசார் அந்த மாணவர்களை கைது செய்தனர்.
Average Rating