அபுதாபியிலிருந்து சென்னை வந்த வாலிபர் விமான நிலையத்தில் அரை நிர்வாணமாக ஓடியதால் பரபரப்பு!!
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு நேற்று காலை அபுதாபியில் இருந்து ஒரு விமானம் வந்தது. இதில் வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த பிரபாகர்(வயது 27) என்பவர் குடியுரிமை, சுங்கம் ஆகிய சோதனைகளை முடித்துக் கொண்டு வெளியே வரும் வழியில் திடீரென தரையில் அமர்ந்து கொண்டார்.
எனக்கு தரவேண்டிய பணத்தை கொடுத்தால் தான் இங்கிருந்து போவேன் என அவர் கூச்சலிட்டார். இதனைக் கண்ட பாதுகாப்பு அதிகாரிகள் அவரது அருகில் வந்தபோது, பிரபாகர் திடீரென தனது சட்டை, பேண்ட்டை கழற்றிவிட்டு அரை நிர்வாணமாக ஓடத் தொடங்கினார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
விமான நிலையத்திற்குள் சுற்றி ஓடிய பிரபாகரை பாதுகாப்பு அதிகாரிகள் பிடித்து உடைகளை அணியச் செய்தனர். அப்போது அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. உடனே விமான நிலைய டாக்டர்கள் குழுவினர் வந்து சோதனை செய்தனர். இதுபற்றி விமான நிலைய மேலாளருக்கு தகவல் தரப்பட்டது.
ராமநாதபுரத்தை சேர்ந்த பிரபாகரின் உறவினர் யாராவது வந்திருந்தால் விமான நிலைய மேலாளர் அறைக்கு வரவும் என்று மைக்கில் அறிவித்தார்.
அப்போது ராமநாதபுரத்தை சேர்ந்த குமார் என்பவர் வந்து பிரபாகர் தனது தம்பி என்று கூறினார். அவரிடம் விசாரித்தபோது அபுதாபிக்கு கட்டிட வேலைக்காக 2 ஆண்டுகளுக்கு முன் அவர் சென்றார். ஆனால் அங்கு பேசியபடி சம்பளம் கொடுக்கவில்லை. இதனால் திரும்பி வந்துவிடுமாறு உறவினர்கள் கூறியதால் வந்துள்ளார். பணமின்றி வந்ததால் மனஉளைச்சலில் அவர் இப்படி நடந்து இருக்கலாம் என தெரியவந்தது. இதையடுத்து பிரபாகருக்கு முதலுதவி அளித்து அவரது அண்ணனுடன் அனுப்பி வைத்தனர்.
Average Rating