கொடுக்கல் வாங்கல் தகராறில் முன்விரோதம்: வீடு புகுந்து கும்பல் தாக்கியதால் தாய்–மகள் விஷம் குடித்தனர்!!
அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலையம்பட்டி வேல்முருகன் காலனியைச் சேர்ந்தவர் ராமானுஜம். இவரது மனைவி லீலாவதி (வயது 46) இவருக்கும், அருப்புக்கோட்டை அஜீஸ்நகரைச் சேர்ந்த ராமகிருஷ்ணனுக்கும் கொடுக்கல் வாங்கல் தகராறு இருந்து வந்தது.
இது தொடர்பான வழக்கு லீலாவதிக்கு சாதகமாக முடிந்துள்ளது. இதனால் ராமகிருஷ்ணன் தரப்பினர் ஆத்திரம் அடைந்தனர். இது தொடர்பாக முன்விரோத தகராறும் ஏற்பட்டது.
இந்த விரோதத்தில் ராமகிருஷ்ணன், சின்னச்சாமி, செல்வராணி, பராசக்தி என்ற மஞ்சுளா, போத்திராஜ், ஓய்வு பெற்ற காவல்துணை கண்காணிப்பாளர் சுப்பையா (எ) சுப்புராஜ் மற்றும் 4 பேர் சேர்ந்து இரவில் லீலாவதி வீட்டிற்கு சென்றுள்ளனர்.
இவர்கள், வீட்டுக்கதவை தட்டியதும் ராமானுஜம் வந்து திறந்தார். அப்போது அவரை, அந்தக்கும்பல் தாக்கியது. மேலும் லீலாவதி அவரது மகள் நதியா ஆகியோரையும் தாக்க முயன்றது.
இதில் அதிர்ச்சி அடைந்த லீலாவதியும், நதியாவும் விஷம் குடித்தார்களாம். இதனால் பயந்துபோன கும்பல், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்ட தாய்–மகள் இருவரும் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுதொடர்பாக அருப்புக்கோட்டை டவுன் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் பார்த்தீபன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Average Rating