கொடைக்கானலில் மாணவிகளை பிரம்பால் அடித்த ஆசிரியர் சஸ்பெண்டு!!
கொடைக்கானல் அருகே செண்பகனூரில் புனித சேவியர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியை சேர்ந்த இயற்பியல் ஆசிரியர் அந்தோணிசாமி 14 மாணவர்கள், 4 மாணவிகளை மதிப்பெண் குறைவாக எடுத்ததாக கூறி பிரம்பால் அடித்தார்.
இதனை கண்டித்தும் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். அதோடு ஆசிரியர் அந்தோணிசாமியை சரமாரியாக தாக்கினர். இதனால் அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டது.
தகவலை அறிந்ததும் கொடைக்கானல் ஆர்.டி.ஓ சுரேஷ் மற்றும் போலீசார் விரைந்தனர். ஆசிரியரை பத்திரமாக பெற்றோர் பிடியில் இருந்து மீட்டனர். இதுகுறித்து பெற்றோர் ஆசிரியர் மீது கொடைக்கானல் போலீசில் புகார் செய்தனர். புகார் மனுவில் தங்கள் குழந்தைகளை கண்மூடித்தனமாக அடித்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து ஆசிரியர் அந்தோணிசாமியை கைது செய்தனர்.
ஆனாலும் பெற்றோர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர். தங்களது ஆதங்கத்தை பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டனர். இதனை தொடர்ந்து ஆசிரியர் அந்தோணிசாமி சஸ்பெண்டு செய்யப்பட்டார். இந்த தகவலை பள்ளி தாளாளர் சேவியர் தெரிவித்துள்ளார்.
Average Rating