மேற்கு வங்காளத்தில் இருந்து கடத்தப்பட்ட பெண் ஓசூரில் மீட்பு: மது பாரில் ஆட வைத்து சித்ரவதை!!
மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த 16 வயது பெண், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 29–ந்தேதி கடத்தப்பட்டதாக அவரது தாயார் போலீசில் புகார் கொடுத்திருந்தார்.
உடனே போலீசார் அந்த பெண்ணின் புகைப்படத்தை அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் அனுப்பி விசாரிக்குமாறு கூறினர். ஆனால் இதில் எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் அந்த பெண் தனது தாயாருக்கு போன் செய்து அழுதாள். பாட்ஷா என்பவன் தன்னை கடத்தி வந்து பீகாருக்கு கொண்டு வந்து விட்டதாகவும், அங்கு ஒரு மது பாரில் ஆட வைத்து சித்ரவதை செய்ததாகவும் அழுதாள்.
மதுபாரில் ஆடியபோது அங்கு வந்த வாடிக்கையாளர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு தற்போது அவருடன் வெளியில் வந்துவிட்டதாகவும் கூறினார்.
உடனே அந்த பெண்ணின் தாயார் தொண்டு நிறுவன உதவியோடு போலீஸ் நிலையத்துக்கு சென்று விவரங்களை கூறினார். போலீசார் அந்த தொலைபேசி நம்பரை பார்க்கும்போது பெங்களூரில் உள்ள போன் நம்பராக இருந்தது. ஆனால் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து பேசியதற்கான சிக்னல் காணப்பட்டது.
உடனடியாக தமிழ்நாடு போலீசுக்கு மேற்குவங்காள போலீசார் தகவல் கொடுத்து இளம் பெண்ணை மீட்டு தருமாறு கேட்டுக் கொண்டனர்.
அதன்பேரில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதில் ஓசூரில் அந்த பெண் பீகார் வாலிபர் ஒருவரது பாதுகாப்பில் இருப்பது தெரியவந்தது. உடனடியாக போலீசார் அந்த பெண்ணை மீட்டு மேற்கு வங்காளத்தில் உள்ள பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்தனர். மகளை பார்த்த பெற்றோர் அளவில்லா மகிழ்ச்சி அடைந்தனர்.
Average Rating