நீதிபதி கொலை வழக்கில் பரோலில் வந்து தலைமறைவான கில்லாடி பெண் டாக்டர் கைது!!
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவை சேர்ந்த பெண் டாக்டர் ரவ்தீப் கவுர், தன்னை திருமணம் செய்ய மறுத்த சண்டிகார் கூடுதல் செசன்சு நீதிபதி விஜய்சிங் என்பவரை 2005-ம் ஆண்டு கொலை செய்தார்.
இதற்காக நேபாளத்தை சேர்ந்த கிராந்தி மன்ஜித் என்பவருக்கு ரூ.5 லட்சம் கொடுத்தார். விஜய்சிங்குக்கு ஏற்கனவே திருமணமாகி 3 மகள்கள் இருந்தனர். இந்த வழக்கில் மன்ஜித் மற்றும் கவுருக்கு சண்டிகார் கோர்ட்டு 2012-ல் ஆயுள் தண்டனை விதித்தது.
சிறையில் அடைக்கப்பட்ட கவுர் 3 முறை பரோலில் வந்தார். 3-வது முறையாக கடந்த ஆண்டு டிசம்பரில் பரோலில் வந்தவர் தனது வீட்டில் போலீசை திசைதிருப்ப தற்கொலை செய்து கொள்வதாக கடிதம் எழுதிவைத்துவிட்டு தலைமறைவாகி விட்டார்.
ஆனால் சந்தேகமடைந்த போலீசார், பாட்டியாலா பஸ் நிலையம், அம்பாலா ரெயில் நிலையம் ஆகிய இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராவில் கவுர் உருவம் பதிவாகி இருந்ததை கண்டுபிடித்தனர்.
அவர் ரெயில் மூலம் உத்தரகாண்ட் சென்றது தெரியவந்தது. கவுர் செல்போனை பயன்படுத்தாததால் அவரது இருப்பிடம் தெரியவில்லை. இதனால் ஒரு சமூக வலைத்தளத்தில் அமெரிக்காவில் உள்ள கவுரின் உறவினர் ஒருவருடன் போலீசார் போலியான பெயரில் நட்பு ஏற்படுத்திக் கொண்டு கண்காணித்தனர்.
அப்போது தான் கவுர் புதிய கணக்கு தொடங்கி அந்த உறவினரிடம் தொடர்பில் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதில் அவர் நேபாளத்தில் அர்பிதா ஜெயின் என்ற பெயரில் வசித்துவந்தார். சண்டிகாரில் பல் மற்றும் முகத்தில் சில பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டார். தனது பெயரில் இருந்த டெபாசிட் தொகை ரூ.10 லட்சத்தையும், தனது நகைகளையும் எடுத்துக் கொண்டார்.
சில போலி சான்றிதழ்கள் வாங்கி வெளிநாடு தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்த அவர், சான்றிதழ் வாங்குவதற்காக உத்தரகாண்ட் மாநிலம் காசிபூர் வந்தபோது போலீசாரிடம் சிக்கிக் கொண்டார்.
அவரிடம் இருந்த ரூ.12 லட்சத்து 90 ஆயிரம் பணம், ஒரு கிலோ தங்க நகைகள் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
Average Rating