காதலன் வீட்டு முன் தர்ணா: போலீஸ் நிலையத்தில் இளம்பெண் கண்ணீர் புகார்!!
ஈரோடு கிருஷ்ணம் பாளையத்தில் உள்ள சித்தன் நகர் 3–வது வீதியை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மகன் விஜய் (23). இவர் பொள்ளாச்சியில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
இவர்களது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் செல்வம். இவரது மகள் கவுசல்யா (19). இவர் அழகு பயிற்சி நிலையத்தில் படித்து வருகிறார்.
விஜய்யும், கவுசல்யாவும் கடந்த 1½ ஆண்டாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களின் காதலுக்கு விஜய்யின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் கவுசல்யா நேற்று விஜய்யின் வீட்டின் முன்பு உட்கார்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
அவர் கூறும் போது தனக்கும் விஜய்க்கும் கடந்த 5–ந்தேதி திருமணம் நடந்ததாகவும், விஜய் குடும்பத்தின் குல தெய்வமான திண்டுக்கல் வேடசந்தூர் அருகே உள்ள பெருமாள் கோவிலில் தங்களுக்கு திருமணம் நடந்ததாகவும் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில் “நாங்கள் திருமணம் செய்து கொண்டதை கேள்விப்பட்டதும் விஜய்யின் பெற்றோர் என்னை மிரட்டி தாலியை பறித்துக்கொண்டனர். அதன்பிறகு விஜய்யை என்னிடம் இருந்து பிரித்து சென்று விட்டனர்” என கூறினார்.
இன்று அதிகாலை 1 மணி வரை இந்த தர்ணா போராட்டம் நீடித்தது.
இதன்பிறகு கவுசல்யா தர்ணா போராட்டத்தை கைவிட்டு கருங்கல் பாளையம் போலீஸ் நிலையம் வந்தார்.
அங்கு அவர் தனது காதல் கணவரை என்னுடன் சேர்த்து வையுங்கள் என்று புகார் கொடுத்தார்.
இது குறித்து கருங்கல் பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காதலன் வீட்டு முன்பு இளம்பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Average Rating