கற்பழிப்பு வழக்கை திரும்பப் பெறக்கோரி நேபாளப் பெண் 3 மாதம் சிறைவைப்பு!!
நேபாளத்தைச் சேர்ந்த சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் அங்குள்ள ஒரு ஹோட்டலில் பணியாற்றி வந்தார். அந்த ஹோட்டலுக்கு உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள மீரட் நகரைச் சேர்ந்த நவீத் என்ற வாலிபர் தொடர் வாடிக்கையாளரானார். அங்கு பணியாற்றிய அப்பெண்ணை பேசி பழக்கப்படுத்திக் கொண்ட நவீத், கடந்த நவம்பர் மாதம் அவரை பலவந்தப்படுத்தி கற்பழித்துவிட்டார்.
பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரையடுத்து நேபாள போலீசார் அந்த வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அவர் சிறையில் அடைக்கப்பட்ட தகவல் மீரட் நகரில் உள்ள அவரது தந்தைக்கு கிடைத்தவுடன் அவர் கொதிப்படைந்தார். உடனடியாக நேபாளத்திற்கு சென்றார். தனது மகன் மீது புகார் அளித்த பெண்ணின் கைக்குழந்தையை மீரட்டுக்கு கடத்தி வந்தார். தன் மகனைக் காணாமல் தேடிய தாயிடம் குழந்தை தன்னிடம் இருப்பதாகவும் மீரட் நகருக்கு வந்தால் தந்து விடுவதாகவும் கூறி மீரட்டின் நவுசாண்டி மாவட்டத்தில் உள்ள தனது வீட்டிற்கு வரவழைத்தார்.
குழந்தையைக் காப்பாற்ற வேண்டும் என்ற பதட்டத்தில் காவல் துறைக்கு தகவல் ஏதும் கொடுக்காமல் மீரட்டுக்குச் சென்ற அந்தப் பெண்ணை வீட்டில் சிறை பிடித்து வைத்து தன் மகன் மீது கொடுத்த புகாரை திரும்பப் பெற வேண்டுமென்று மிரட்டியுள்ளார். அதற்கு மறுத்த அப்பெண்ணை நசீமும் அவனது குடும்ப உறுப்பினர்களும் சேர்ந்து அடித்துத் துன்புறுத்தியுள்ளனர்.
அவர்களிடமிருந்து குழந்தையுடன் தப்பி ஓடி வந்த அந்தப்பெண் நேற்று போலீசில் அளித்த புகாரையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating