கோவையில் ஆபாச படம்–புதுப்பட சி.டி.தயாரிக்கும் தொழிற்சாலை கண்டுபிடிப்பு: 2 பேர் கைது!!
கோவை கணபதி பகுதியில் ஆபாச படங்கள் மற்றும் தற்போது திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கும் சினிமாக்களின் சி.டி.க்கள் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்படுவதாக சரவணம்பட்டி போலீசுக்கு தகவல் வந்தது.
இன்ஸ்பெக்டர் ஜோதி உத்தரவின் பேரில் போலீசார் கணபதி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் ரகசியமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஆபாசபடம் மற்றும் புதுப்படங்களின் சி.டி.க்கள் தயாரிப்பது உறுதியானது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜோதி மற்றும் போலீசார் அந்த வீட்டை இன்று சுற்றி வளைத்தனர்.
அதிரடியாக உள்ளே புகுந்தனர். அங்கு ஆபாச சி.டி. மற்றும் புதுப்பட சி.டி.க்களின் தயாரிப்பு பணி நடைபெறும் இடம் தொழிற்சாலை போலவே இருந்தது. சி.டி.தயாரித்துக்கொண்டிருந்த 2 பேரை மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.
பின்னர் அங்கிருந்த 6 யூனிட் எந்திரங்களை பறிமுதல் செய்தனர். மேலும் அங்கு மலைபோல் குவித்து வைக்கப்பட்டிருந்த 1,250 சி.டி.க்களை பறிமுதல் செய்தனர்.
அவற்றில் ஆபாச பட சி.டி.க்கள் மற்றும் சமீபத்தில் ரிலீசாகி ஓடிக்கொண்டிருக்கும் ‘ஐ, என்னை அறிந்தால், பிசாசு, டார்லிங், ஆம்பள, கில்லாடி, இசை’ உள்பட பல புதிய பட சினிமாக்களின் சி.டி.க்கள் இருந்தது.
கைதானவர்களிடம் போலீசார் விசாரித்த போது அவர்களில் ஒருவர் கோவை உக்கடம் ஜி.எம்.நகரை சேர்ந்த இக்பால்(வயது 54) என்பதும், மற்றொருவர் கோவை பூ மார்க்கெட் சித்தி விநாயகர் கோவில் வீதியை சேர்ந்த சீனிவாசன் (41) என்றும் தெரியவந்தது.
தொடர்ந்து அவர்களிடம் ரகசிய இடத்தில் விசாரணை நடந்து வருகிறது. எவ்வளவு காலமாக இந்த ஆபாச சி.டி.தயாரிப்பு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது என்பது தெரியவில்லை. தொடர் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.
Average Rating