பெண் குழந்தை பிறந்ததால் இளம்பெண்ணை கொடுமை செய்த கணவன்–மாமியார் கைது!!
செஞ்சி அருகே மல்லாண்டி கிராமத்தை சேர்ந்தவர் மணி. இவரது மகன் சத்யராஜ் (வயது 32), கல் உடைக்கும் தொழிலாளி. இவரது மனைவி காமாட்சி (30). இவர்களுக்கு திருமணமாகி 9 ஆண்டுகள் ஆகிறது. இதற்கிடையே காமாட்சிக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் பெண் குழந்தை பிறந்ததால் சத்யராஜ் குடும்பத்தினர் காமாட்சியை வெறுத்தனர். தினமும் காமாட்சியை சத்யராஜ், அவரது தந்தை மணி, தாய் அஞ்சலை ஆகியோர் அடித்து உதைத்து சித்ரவதை செய்து வந்தனர்.
ஒரு கட்டத்தில் காமாட்சியிடம் வெள்ளை தாளில் கையெழுத்து வாங்கிக் கொண்டு சத்யராஜிக்கு அவரது பெற்றோர் அழகேஸ்வரி என்ற பெண்ணை 2–வது திருமணம் செய்து வைத்தனர். இதனை காமாட்சி தட்டி கேட்டபோது அழகேஸ்வரியும் சேர்ந்து கொண்டு காமாட்சியை அடித்து உதைத்து கொடுமை செய்தார். மேலும் மண்எண்ணெயை உடலில் ஊற்றி உயிரோடு எரித்து கொன்றுவிடுவதாக காமாட்சியை அவர்கள் மிரட்டினர்.
இதனால் பொறுமை இழந்த காமாட்சி இதுகுறித்து செஞ்சி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சத்யராஜ் மற்றும் இவரது தாய் அஞ்சலை ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகிறார்கள்.
Average Rating