குடியாத்தத்தில் ஆஸ்பத்திரியில் மத பிரசாரம் செய்த 2 பேர் கைது!!
குடியாத்தம் அரசு மருத்துவமனையில் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். மேலும் 200–க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த அரசு மருத்துவமனையில் மாலை மற்றும் இரவு நேரங்களில் சிலர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுபவர்களிடம் மதம் சம்பந்தமாக துண்டு பிரசுரங்களை அளித்தும், பிரார்த்தனை மற்றும் மத பிரசாரம் செய்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சிலர் அரசு மருத்துவமனையில் நோயாளிகளிடம் மத பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதாக தகவல் பரவியது.
உடனே அன்றிரவு இந்து முன்னணியினர் அரசு மருத்துவமனைக்கு சென்றபோது, சிலர் நோயாளிகளிடம் மதம் சம்பந்தமாக புத்தகங்களை வழங்கி பிரசாரம் செய்து கொண்டிருந்தனர். இதனையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனையில் நோயாளிகளிடம் மதம் சம்பந்தமாக புத்தகங்களை வழங்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அப்போது பணியில் இருந்த மருத்துவர் உஷா குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
அதேபோல் இந்து முன்னணியினரும் புகார் செய்தனர். இதனையடுத்து குடியாத்தம் போலீஸ் துணை சூப்பிரண்டு விஜயகுமார், இன்ஸ்பெக்டர்கள் சரவணன், சாந்தலிங்கம், சாந்தி ஆகியோர் அரசு மருத்துவமனையில் விசாரணை நடத்தினர்.
இதுதொடர்பாக டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து நோயாளிகளிடம் மதம் சம்பந்தமாக புத்தகங்களை வழங்கி பிரசாரம் செய்ததாக மேல்பட்டியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் (வயது 65), குடியாத்தம் பச்சையம்மன் கோவில் தெரு ஆற்றோரம் பகுதியை சேர்ந்த அனிதா (வயது 38) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
மேலும் இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating