காதலர் தினத்தை தடை செய்ய வேண்டும்: பாரதீய வித்யார்த்தி பரிஷத் வலியுறுத்தல்!!
அகில இந்திய வித்யார்த்தி பரிஷத் மாணவர் இயக்க துணை தலைவர் சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
நமது நாடு, பெண்களை தாயாகவும், சகோதரிகளாகவும், கடவுள்களின் உருவமாகவும் வணங்கி போற்றுகின்ற புண்ணிய பூமியாகும். ஆனால் பெண்களை ஆபாசமாகவும், அவர்களை போதைப் பொருளாகவும் சித்தரிக்கும் ‘‘காதலர் தினத்தை’’ கொண்டாடுவது வேதனைக்குரியதாகும். அன்றைய தினத்தில் பள்ளி, கல்லூரிகளில் மாணவிகள் பெரும் துன்பத்திற்கு ஆளாக்கப்படுகின்றார்கள். ஈவ்டீசிங் போன்ற கொடுமைகள் பெரிய அளவில் நடைபெறுகின்றன.
எனவே, புதுவை அரசும், காவல்துறையும், பாரதத்தின் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் சீரழித்து, இளைஞர்களின் எதிர்கால சிந்தனைகளை மழுங்கச் செய்யும் ‘காதலர் தினம்’ என்ற கொடிய அரக்கனை புதுவை மாநிலத்தில், நுழைய விடாமல் தடைசெய்ய வேண்டும். மேலும் கல்லூரி வாசல்களிலும், பேருந்து நிலையங்களிலும் காவல்துறை தக்க பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
காதலர் தினத்தையொட்டி பொது இடங்களிலும், நட்சத்திர ஓட்டல் அல்லது வேறு இடத்தில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றால் மாணவர்களை ஒன்று திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரிக்கிறோம். காதலர்கள் என்ற போர்வையில் பொது இடங்களில் அருவறுக்கத்தக்க வகையில் நடந்து கொண்டாலோ, தவறான செயல்களில் ஈடுபட்டாலோ அவர்களைப் பிடித்து காவல்துறையில் ஒப்படைப்பதுடன், காவல் துறையின் துணையோடு, அவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும் என எச்சரிக்கிறோம்.
மேலும், புதுவையில் காதலர் தினத்தை ஊக்கப்படுத்தும் விதத்தில் எந்த நிறுவனமாவது செயல்பட்டால் பரிஷத் மாணவர்கள், அவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என எச்சரிக்கின்றோம்.
இவ்வாறு சிவா அறிக்கையில் கூறியுள்ளார்.
Average Rating