இளம்பெண் காதல் போர்: திருமண வயது எட்டும் வரை அமைதி காக்க வேண்டும்-போலீசார் அறிவுரை!!
ஈரோடு கிருஷ்ணம் பாளையத்தில் உள்ள சித்தன் நகர் 3–வது வீதியை சேர்ந்தவர் தங்கராஜ். இவரதுமகன் விஜய் (20). இவர் பொள்ளாச்சியில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
இவர்களது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் செல்வம். இவரது மகள் கவுசல்யா (18). இவர் அழகு பயிற்சி நிலையத்தில் படித்து வருகிறார்.
கவுசல்யா சம்பவத்தன்று விஜய்யின் வீட்டின் முன்பு திடீர் என்று உட்கார்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
அவர் கூறும் போது நானும் விஜய்க்கும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்ததாகவும், இதை தொடர்ந்து கடந்த 5–ந்தேதி திண்டுக்கல் அருகே கோவிலில் தங்களுக்கு திருமணம் நடந்ததாகவும் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில் ‘‘நாங்கள் திருமணம் செய்து கொண்டதை கேள்விப்பட்டதும் விஜய்யின் பெற்றோர் என்னைமிரட்டி தாலியை பறித்து கொண்டதாகவும் இதன்பிறகு விஜய்யை தன்னிடம் இருந்து பிரித்து சென்று விட்டதாகவும்’’ கூறினார்.
பிறகு போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் கவுசல்யா தர்ணா போராட்டத்தை கைவிட்டார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் கவுசல்யா தனது காதல் கணவரை தன்னுடன் சேர்த்து வைக்க கோரி சாலை மறியலில் ஈடுபட்டார். இதையொட்டி கருங்கல் பாளையம் போலீசார் கவுசல்யாவையும் அவருக்கு ஆதரவாக மறியலில் ஈடுபட்ட 21 பேரையும் கைது செய்தனர்.
இது தொடர்பாக நேற்று அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் விசாரணை நடந்தது. அப்போது தன்னை தனது காதல் கணவருடன் சேர்த்து வைக்கும்படி கூறினார்.
ஆனால் விஜய்யோ நான் கவுசல்யாவை காதலிக்கவும் இல்லை. திருமணம் செய்து கொள்ளவும் இல்லை என்று கூறினார்.
இதை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி கூறும் போது விஜய்யுக்கும், கவுசல்யாவுக்கும் இன்னும் திருமண வயது எட்டவில்லை. எனவே கவுசல்யா கூறுவது போல அவர்கள் திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கூறினார்.
இதை தொடர்ந்து கவுசல்யாவிடம் போலீசார் தொடர்ந்து அறிவுரை நடத்தினர். இதன்பிறகு கவுசல்யா போலீசார் கூறிய அறிவுரையை ஏற்று கொண்டார்.
இதன்பிறகு திருமண வயது எட்டும் வரை நான் விஜய்க்காக காத்திருப்பேன் என்று போலீசாரிடம் எழுதி கொடுத்து விட்டு அங்கிருந்து சென்று விட்டார்.
கடந்த 4 நாட்களாக நடந்த கவுசல்யாவின் காதல் போராட்டம் முடிவுக்கு வந்தது.
Average Rating