கைக்குழந்தையுடன் பெண்ணை காட்டி ரூ.15 ஆயிரம் வழிப்பறி!!
ஆலங்காயம் கொல்லதெருவை சேர்ந்தவர் முனிரத்தினம் மகன் வினோத்குமார் (27) ஆலங்காயம் பஸ் நிலையத்தில் பூ வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய காரை ரிப்பேர் சீரமைக்க வேலூர் சென்று விட்டு நேற்று இரவு வேலூரில் இருந்து அணைக்கட்டு வழியாக ஆலங்காயம் சென்றார்.
இரவு சுமார் 9.45க்கு வேப்பங்குப்பம் அடுத்த கொல்லமேட்டில் மலைப்பாதையில் கார் சென்றது. அப்போது கைக்குழந்தையுடன் நடுரோட்டில் நின்ற பெண் காரை வழிமறித்தார். ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் கைக்குழந்தையுடன் பெண் தவித்து கொண்டிருக்கிறாள் என நினைத்த வினோத்குமார் காரை நிறுத்தினார். அந்த பெண்ணிடம் யார் நீ எங்கு செல்ல வேண்டும் என விசாரித்தபடி காரை விட்டு கீழே இறங்கினார்.
அப்போது அங்கு மறைந்திருந்த 6 பேர் சேர்ந்த கும்பல் வேகமாக வந்து காரை மடக்கினர். வினோத்குமாரிடம் கத்தியை காட்டி மிரட்டினர்.
மேலும் அவரை கை, கால் உள்பட பல இடங்கிளல் உருட்டுக்கட்டையால் தாக்கினர். இதில் பலத்த காயம் அடைந்தார். அவரிடம் இருந்த 2 செல்போன்கள், ரூ.15ஆயிரம் பணம் ஆகியவற்றை பறித்தனர்.
காரை வழிமறித்த பெண் உள்பட 7 பேரும் டெம்போ வேனில் ஏறி வேலூர் ரோட்டில் தப்பி சென்று விட்டனர்.
பலத்த காயமடைந்த வினோத்குமார் ஆலங்காயம் சென்று சிகிச்சை பெற்றார். நள்ளிரவு உறவினர்களுடன் வேப்பங்குப்பம் சென்றார். சம்பவம் குறித்து வேப்பங் குப்பம் போலீசில் புகார் செய்தார்.
இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி, சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் காசி மற்றும் போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து பெண்ணை காட்டி வழிப்பறி செய்த கும்பலை வலை வீசி தேடி வருகின்றனர்.
வேலூர் மாவட்ட சூப்பிரண்டு செந்தில்குமாரி வாப்பறி நடந்த இடத்தை பார்வையிட்டார். கும்பலை விரைந்து பிடிக்க விசாரணையை முடுக்கி விட்டார்.
Average Rating