ஒடிசாவில் பள்ளி கணக்காளரின் வக்கிர புத்தி: ஆபாச படம் எடுத்ததால் விடுதியை விட்டு வெளியேறிய மாணவிகள்!!
ஒடிசா மாநிலத்தில் தங்களை ஆபாசமாக படம் பிடித்த விஷயம் தெரிய வந்ததை அடுத்து அச்சத்தில் நிறைய மாணவிகள் பள்ளி விடுதியை விட்டு வெளியேறியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் மாணவிகளின் பெற்றோர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசாவில் கஞ்ஜம் மாவட்டத்தில் மாநில அரசுக்கு சொந்தமான கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா பள்ளி உள்ளது. இங்கு பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மாணவிகள் விடுதியில் தங்கியபடியே பள்ளியில் கல்வி கற்று வருகின்றனர்.
சில தினங்களுக்கு முன், பள்ளி கணக்காளரிடமிருந்து மாணவிகளின் அரை நிர்வாண மற்றும் நிர்வாண காட்சிகள் அடங்கிய 22-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் கைப்பற்றப்பட்டது. கடந்த வருடம் சுற்றுலாவுக்காக சென்ற மாணவிகளை விடுதி சமையல்காரர் குடியாலியின் உதவியுடன் கணக்காளர் இப்புகைப்படங்களை எடுத்திருப்பதும் தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த பள்ளி தலைமையாசிரியை மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளரிடம் தகவல் தந்தார். இதையடுத்து இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. உடனடியாக விசாரணையில் ஈடுபட்ட மாவட்ட குழந்தைகள் நல குழுமத்தின் தலைவர் எஸ்.சி.தாஸ் பள்ளியின் கணக்காளர் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்தார்.
இதையடுத்து பள்ளி கணக்காளரும், சமையல்காரரும் வேலையை ராஜினாமா செய்தனர். விடுதி வார்டன் நீண்ட கால விடுப்பு எடுத்து விட்டு தலைமறைவாகிவிட்டார். தற்போது பள்ளி கணக்காளர் துலு புயன் மீது கபிசூர்யா நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை முதல் விடுதியில் தங்கியிருந்த 87 பேரில் 60 பேர் வெளியேறிவிட்டதாக சர்வ சிக்ஷ அபியான் (அனைவருக்கும் கல்வி) திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் சுதம் மண்டல் தெரிவித்தார். வெளியேறிய மாணவிகள் அனைவரும் ஆறு முதல் எட்டாம் வகுப்பை சேர்ந்தவர்கள்.
இச்சம்பவத்தையடுத்து பெண் போலீஸ் ஒருவர் விடுதியில் மாணவிகளின் பாதுகாப்பிற்காக தங்கியுள்ளார்.
Average Rating