திருத்துறைப்பூண்டி அருகே வாலிபர் தற்கொலை: 2 பெண்கள் கைது!!
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அண்ணா நகர் ஜீவா தெருவை சேர்ந்தவர் இரணியன். இவருடைய மனைவி செல்வி. இவர்கள் இறந்து விட்டனர். இவர்களுக்கு வினோதினி (வயது 21), மாரியம்மாள் (20) என்ற 2 மகள்களும், ஹரிகிருஷ்ணன் (18) என்ற மகனும் உள்ளனர். 3 பேருக்கும் திருமணம் ஆகவில்லை. இதில் ஹரிகிருஷ்ணன் கொத்தனார் வேலைக்கு சென்று அக்காக்கள் இருவரையும் கவனித்து வந்தார்.
இந்த நிலையில் ஜீவா தெருவில் உள்ள காத்தாயி அம்மன் கோவிலில் திருவிழா நடந்தது. இந்த விழாவில் சமையல் செய்வதற்காக ஹரிகிருஷ்ணன் மற்றும் அவருடைய நண்பர்கள் 2 பேர் அண்ணா நகர் மெயின் சாலை பெருமாள் கோவில் அருகே உள்ள நகராட்சி குழாயில் தண்ணீர் எடுக்க சென்றனர். அப்போது அங்கு வந்த அண்ணா நகரை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மனைவி இளவரசி(45), சியாமளா(35), சரவணன், நாகராஜ், உப்புக் குளத்தெருவை சேர்ந்த விக்னேஷ், அ.தி.மு.க.வைச் சேர்ந்த நகரசபை உறுப்பினர் ராஜா ஆகிய 6 பேர் ஹரிகிருஷ்ணனை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.
இதனால் மனம் உடைந்த ஹரிகிருஷ்ணன் இரவு 11 மணி அளவில் வீட்டிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஹரிகிருஷ்ணனின் அக்கா வினோதினி, திருத்துறைப்பூண்டி போலீசில் புகார் கொடுத்தார். புகாரில் சாதி பெயரை கூறி தரக் குறைவாக பேசி தனது தம்பியை இழிவு படுத்தியதால், அவர் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டதாகவும், தரக்குறைவாக பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி இருந்தார்.
புகாரின்பேரில் திருத்துறைப்பூண்டி போலீஸ் துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணதாசன், இன்ஸ்பெக்டர் ஆனந்தவேலு, சப்–இன்ஸ்பெக்டர் அருள்பிரியா மற்றும் போலீசார் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
பின்னர் ஹரிகிருஷ்ணனின் உடலை போலீசார், பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக இளவரசி, சியாமளா ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அ.தி.மு.க. நகராட்சி கவுன்சிலர் ராஜா உள்பட 4 பேரை தேடி வருகிறார்கள்.
Average Rating