ஹலோ சொல்லப் போன வாலிபரின் முகம் கிழிந்தது: சார்ஜரில் இருந்த செல்போனில் பேசியதால் விபரீதம்!!
புதுமையான பல கண்டுபிடிப்புகள் உலகையே உள்ளங்கைக்குள் சுருக்கி விட்டதாக பலர் பாராட்டி வரும் அதே வேளையில் முறை தவறி பயன்படுத்தப்படும் இந்த கண்டுபிடிப்புகள் எமனாக மாறிவிடும் வாய்ப்பும் உள்ளதாக எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுதான் வருகின்றது.
ஆனால், இந்த எச்சரிக்கையை பொருட்படுத்தத பலர் வரம்பு மீறி நடந்து கொள்ளும் சம்பவங்கள் பெரும்பாலும் விபரீதத்தில் தான் முடிந்துள்ளன. அவ்வகையில், கர்நாடக மாநிலம் மைசூரில் சமீபத்தில் நடந்தேறிய ஒரு விபரீதத்தை வெறும் செய்தியாக மட்டுமின்றி ஒரு பாடமாகவும் நாம் ஏற்றுக் கொண்டே தீர வேண்டும்.
பீகார் மாநிலத்தை சேர்ந்த சீதாராம் என்ற 18 வயது வாலிபர், வயிற்றுப் பிழைப்புக்காக கூலி வேலை தேடி மைசூர் நகருக்கு வந்தார். இங்குள்ள ஒரு கட்டுமான நிறுவனத்தில் தினக்கூலியாக வேலை செய்தபடி, பணி நடைபெறும் கட்டிட வளாகத்தில் தங்கியுள்ளார்.
கடந்த மூன்றாம் தேதி இவரது கைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது. சார்ஜர் மூலம் கைபேசி பேட்டரிக்கு மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்த நிலையில் அந்த அழைப்புக்கு பதில் சொல்லும் அவசரத்தில் சார்ஜர் இணைப்பில் இருந்து கைபேசியை விடுவிக்காமலேயே ‘ஆன்’ செய்து அவர் ‘ஹலோ’ சொல்ல முயன்ற போது பயங்கர சத்தத்துடன் கைபேசி பேட்டரி வெடிகுண்டு போல் வெடித்து சிதறியது. இதில், சீதாராமின் முகம் சிதைந்து ரத்தக்களறியானது.
அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த சகப் பணியாளர்கள் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு தூக்கிச் சென்றனர். அங்கு அளிக்கப்பட்ட அவசரச் சிகிச்சையில் அவரது தொடை பகுதி தோலை எடுத்து முகத்தில் ஒட்டி தையல் போட்ட டாக்டர்கள், கீழ் தாடை பகுதியின் முக்கிய எலும்பு சேதம் அடைந்து நொறுங்கி விட்டதால் முக சீரமைப்பு அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைத்துள்ளனர்.
அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் பிழைத்து விட்டாலும், முன்னர் இருந்த அந்த அழகிய முக அமைப்பை அந்த வாலிபர் மீண்டும் பெற பல லட்சம் ரூபாய் செலவும், பல ஆண்டு கால காத்திருப்பும் அவசியம் என தெரியவந்துள்ளது. இத்தனை ஆண்டு காத்திருப்புக்கு பதிலாக ஒரு நிமிடம் யோசித்து, சார்ஜர் இணைப்பில் இருந்து கைபேசியை துண்டித்து விட்டு வந்த அழைப்புக்கு பதில் அளித்திருந்தால் சீதாராமுக்கு இந்த பரிதாப நிலை ஏற்பட்டிருக்க வாய்ப்பே இல்லை என அவரது உறவினர்கள் குமுறுகின்றனர்.
இந்த துயரம் சீதாராமனுடன் முடிந்துப் போகவும், உலகில் வேறு யாருக்கும் தொடராதிருக்கவும் இந்த செய்தியை நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு தெரியப்படுத்துவதுடன் நீங்களும் சார்ஜரில் கைபேசி இணைக்கப்பட்டிருக்கும் நேரத்தில் ’ரிங் டோன்’ வந்தால் ‘அழைப்பது எமனாக இருக்கலாம்’ என்பதில் கவனமாக இருங்கள்.
Average Rating