செஞ்சி அருகே கிணற்றில் தள்ளி 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை முயற்சி!!
செஞ்சி அருகே உள்ள தேவந்தவாடி பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 33), விவசாயி. இவரது மனைவி பரமேஸ்வரி (24). இவர்களுக்கு கார்த்திகா என்ற 1½ வயது மகளும், கார்த்திக் என்ற 4 மாத ஆண் குழந்தையும் இருந்தது. முருகனுக்கும், பரமேஸ்வரிக்கும் அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்தது.
நேற்று மாலை முருகன் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். பரமேஸ்வரியுடன் தகராறு செய்தார். இதனால் அவர் மனமுடைந்தார். குழந்தைகளுடன் சாவதற்கு முடிவு செய்தார். பின்னர் பரமேஸ்வரி தனது 2 குழந்தைகளையும் தூக்கி கொண்டு அருகில் உள்ள கிணற்றுப்பகுதிக்கு சென்றார். மனதை கல்லாக்கிக்கொண்டு அந்த 2 குழந்தைகளையும் கிணற்றில் தூக்கி வீசினார். பின்னர் அவரும் கிணற்றில் குதித்து விட்டார்.
இதைப்பார்த்த பொதுமக்கள் அங்கு விரைந்து வந்தனர். கிணற்றில் உயிருக்கு போராடி கொண்டிருந்த பரமேஸ்வரியையும், அவரது 2 குழந்தைகளையும் மீட்டனர். பின்னர் அவர்களை வேலூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இன்று காலை சிகிச்சை பலனளிக்காமல் குழந்தைகள் கார்த்திகா, கார்த்திக் ஆகிய இருவரும் பரிதாபமாக இறந்தனர். பரமேஸ்வரிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து வளத்தி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இந்த சம்பவம் தேவந்தவாடி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating