செங்குன்றம் அருகே கோவில் கும்பாபிஷேகத்தில் 4 பெண்களிடம் நகை பறிப்பு!!
செங்குன்றம் அருகே உள்ள முண்டியம்மன் நகர் ஆலமரம் பகுதியில் முனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகம் இன்று காலை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். பெண்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் நகை பறிப்பு கும்பல் பக்தர்கள் போல் ஊடுருவியது. பெண்கள் பய பக்தியுடன் சாமி கும்பிட்ட போது அந்த கும்பல் நகை பறிப்பில் ஈடுபட்டது.
4 பெண்கள் தங்களது தாலி செயினை பறிகொடுத்தனர். காந்தி நகர் தேவகி (65) 4 பவுன் செயின், பாடியநல்லூர் ஜெயமணி (58) 2 பவுன் செயின், முண்டியம்மன் நகர் சுந்தரி (67) 4 பவுன் செயின், கஸ்தூரியம்மாள் (68) 4 பவுன் செயின் என மொத்தம் 14 பவுன் செயின் பறிக்கப்பட்டது. அதன் மதிப்பு ரூ.3 லட்சம்.
செயின் பறித்த கும்பல் அங்கிருந்து நைசாக நழுவி தப்பி ஓடிவிட்டது. அதன் பிறகுதான் நகை பறிபோனது தெரியவந்தது. இதையடுத்து 4 பெண்களும் செங்குன்றம் போலீசில் புகார் செய்தனர்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating