ஐ.எஸ் தீவிரவாதிகளிடமிருந்து காதலியை காப்பாற்ற முயற்சிகள் செய்தேன்: காதலன் கண்ணீர் பேட்டி (வீடியோ இணைப்பு)!!
ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் பிணையக்கைதியாக இருந்த கய்லா மியல்லரை காப்பாற்ற பல முயற்சிகள் செய்ததாக அவருடைய காதலன் பரபரப்பான தகவலை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்க தொண்டு நிறுவன ஊழியரான கய்லா மியல்லரையும் அவரது காதலனான Omar Alkhani என்பவரையும் ஐ.எஸ் தீவிரவாதிகள் கடந்த 2013ம் ஆண்டு கடத்தி சென்றனர்.
இந்த கடத்தல் சம்பவம் நடைபெறுவதற்கு முன்பாகவே மியல்லரும் தானும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை எடுத்திருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
Omar Alkhani இதுபற்றி கூறுகையில், தங்களுக்கு தீவிரவாதிகளால் ஆபத்து ஏற்படும் பட்சத்தில் தனக்கும் மியல்லருக்கும் ஏற்கனவே திருமணம் நடந்து விட்டது என கூறினால் தீவிரவாதிகள் தங்களை விடுவித்து விடுவார்கள் என திட்டம் தீட்டியிருந்ததாகவும் அதற்கு மியல்லர் சம்மதம் தெரிவித்திருந்தார் எனவும் கூறினார்.
ஆனால், தீவிரவாதிகளால் கடத்தியபின், மியல்லரை அவர்கள் விசாரித்தபோது தங்களுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என மியல்லர் உண்மையை கூறியதால்தான் அவரை தீவிரவாதிகள் விடுவிக்கவில்லை என்றார்.
ஏற்கனவே தீட்டியிருந்த திட்டத்திற்கு எதிராக மியல்லர் எதற்காக உண்மையை கூறினார் என தற்பொழுது வரை தெரியவில்லை என்றும் அவர் திட்டமிட்டவாறு கூறியிருந்தால் தீவிரவாதிகள் இருவரையும் விடுவித்திருப்பார்கள் என்றார்.
மேலும் மியல்லர் உண்மையை கூறியதால், இரண்டு மாதத்திற்கு பிறகு Omar Alkhani-யை தீவிரவாதிகள் விடுதலை செய்தனர்.
மியல்லர் பற்றி அவர் கூறுகையில், மியல்லர் தனக்காக அழகு சாதனப்பொருட்களை வாங்க மாட்டார் என்றும் அந்த பணத்தை கொண்டு ஏழை குழந்தைகளுக்கு உதவி செய்யும் கருணை உள்ளம் கொண்டவர் எனவும் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மியல்லர் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பை சேர்ந்த தலைமை கமாண்டர் ஒருவரை திருமணம் செய்ததாகவும், ஜோர்டன் நாடு நடத்திய தாக்குதலில் மியல்லர் இறந்து விட்டதாகவும் தீவிரவாதிகள் கடந்த வாரம் அறிவித்தனர்.
மேலும் இந்த தகவலை உறுதி செய்யாத நிலையில், இரு தினங்களுக்கு முன் மியல்லர் கொல்லப்பட்டது உண்மை தான் என அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
Average Rating