ஒரே வீட்டுக்கு மருமகளாக சென்ற உயிர் தோழிகள் தற்கொலை: மாமியார் அடித்துக் கொன்றதாக புகார்!!
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் புத்தவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராம்பாபு (25), சிவா (23) அண்ணன்– தம்பிகளான இவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த உயிர் தோழிகளான முரளி ரமனம்மா (19), ஜான்சி ராணி (18) ஆகியோரை காதலித்தனர்.
ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர் சம்மதத்துடன் இவர்களது திருமணம் கடந்த ஆண்டு நடந்தது. முதலில் ராம்பாபு– முரளி ரமனம்மா திருமணமும், 4 நாள் இடை வெளியில் சிவா– ஜான்சி ராணி திருமணமும் நடந்தது.
திருமணத்துக்கு பிறகு உயிர் தோழிகள் தங்கள் கணவர்கள் மற்றும் மாமியார்– மாமனாருடன் கூட்டு குடித்தனம் நடத்தி வந்தனர்.
மாமியார்– மருமகள்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. மாமியார் ஒரு மருமகளை திட்டினால் தோழியான மற்றொரு மருமகளும் சேர்ந்து மாமியாருடன் தகராறு செய்வது உண்டு.
தகராறு முற்றவே ஒரு கட்டத்தில் மருமகள் இருவரும் ஒரேநாளில் தங்கள் தாய்வீட்டுக்கு சென்று விட்டனர். உறவினர்கள் சமரசம் செய்து இருவரையும் நேற்று முன்தினம் மாமியார் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் நேற்று மாமனார்– மாமியார் மற்றும் கணவர்கள் கட்டிட வேலைக்கு சென்று விட்டனர். மதியம் ராம்பாபு வீட்டுக்கு வந்தபோது தோழிகள் முரளி ரமனம்மா, ஜான்சிராணி இருவரும் வீட்டு உத்திரத்தில் தூக்கில் பிணமாக தொங்கினர்.
கண்ணவரம் போலீசார் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.
‘‘இருவரது மரணத்திலும் சந்தேகம் இருப்பதாகவும், அவர்கள் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று கருதுவதாகவும் போலீசார் தெரிவித்தனர். இருந்தாலும் பிரேத பரிசோதனைக்கு பிறகே முடிவு தெரியும்’’ என்று கூறினார்கள்.
ஜான்சிராணியின் தாய் ஏசுமரியம்மா கூறும்போது, ‘‘என் மகளை மாமியார் அடித்து கொன்று தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை நாடகமாடுகின்றார்’’ என்றார்.
ஒரேநாளில் உயிர் தோழிகளான மருமகள்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating