புதுக்கோட்டை அருகே குடிபோதையில் மனைவியை கல்லால் அடித்து கொன்ற கணவர்!!
புதுக்கோட்டை மாவட்டம் மலைக்குடிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் தமிழ ரசன்–அழகுமணி தம்பதியினர். விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியை சேர்ந்த தமிழரசன் கேரளாவில் கூலி வேலைக்கு சென்றபோது அவருடன் வேலை பார்த்த அழகுமணியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
பின்னர் அவர்கள் மலைக்குடிப்பட்டிக்கு வந்து கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வந்தனர். இந்த தம்பதிக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். அவர்கள் விராலிமலை அருகே உள்ள பிரேமானந்தா ஆசிரமத்தில் தங்கி படித்து வருகிறார்கள்.
இந்தநிலையில் கணவன், மனைவி இருவருக்கும் குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. நேற்று மாலை இருவரும் அளவுக்கு அதிகமாக மது அருந்தியுள்ளனர். இதில் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது.
ஆத்திரம் அடைந்த தமிழரசன் அங்கிருந்த கல்லை எடுத்து மனைவி அழகுமணியின் முகம் மற்றும் உடல் முழுவதும் சரமாரியாக தாக்கினார். இதில் அவர் மயங்கினார். சிறிது நேரத்தில் போதையில் இருந்த தமிழரசனும் நிதானம் இழந்து மயங்கி விழுந்தார்.
இரவு 10 மணிக்கு போதை தெளிந்து எழுந்த தமிழரசன் மனைவி இறந்து கிடந்ததை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இந்த சம்பவம் குறித்து அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த இலுப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அழகுமணியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். மேலும் தலைமறைவான தமிழரசனை தேடி வருகிறார்கள். இச்சம்பவம் இலுப்பூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating