எழும்பூரில் ஓடும் பஸ்சில் டிரைவரை தாக்கிய பள்ளி மாணவர்கள்!!
எழும்பூரில் ஓடும் பஸ்சில் டிரைவரை தாக்கிய பள்ளி மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பஸ்கள் நிறுத்தப்பட்டன.
பெரியார் நகரில் இருந்து அண்ணா சதுக்கத்துக்கு ‘29ஏ’ அரசு டவுன் பஸ் இன்று காலை 10.25 மணிக்கு புறப்பட்டு சென்றது. அதில் எழும்பூர் அம்பேத்கர் அரசு பள்ளி மாணவர்கள் ஏறினர்.
அவர்கள் பஸ்சுக்குள் மேளம் அடித்தபடி பாட்டுப் பாடி கொண்டே படிக்கட்டில் தொங்கிய படி பயணம் செய்தனர். எழும்பூர் அருகே வந்தபோது இதை பார்த்த டிரைவர் பென்னெட் உள்ளே வரும்படி கூறி கண்டித்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த மாணவர்கள் சிலர் டிரைவரிடம் சென்று வாக்குவாதம் செய்தனர். பின்னர் அவரது முகத்தில் கையால் குத்தி காயம் ஏற்படுத்தியதாக தெரிகிறது.
எனவே, அவர் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுபற்றிய செய்தி அரசு பஸ் டிரைவர், கண்டக்டர்கள் மத்தியில் காட்டு தீ போன்று பரவியது. உடனே எழும்பூர் வழியாக செல்லும் பஸ்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு போராட்டம் நடத்தப்பட்டது.
டிரைவரை தாக்கிய மாணவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதற்கிடையே பஸ்கள் நிறுத்தப்பட்டால் பயணிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகினர்.
உடனே போக்குவரத்து அதிகாரிகளும், போலீசாரும் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட அரசு பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களுடன் சமரச பேச்சு நடத்தினார்கள்.
அதை தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இப்பிரச்சினையால் சுமார் 30 நிமிடம் டவுண் பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதற்கிடையே டிரைவரை தாக்கிய மாணவர்கள் 5 பேரை போலீசார் பிடித்தனர். அவர்களிடம் விசாரணை நடக்கிறது.
Average Rating