செஞ்சி அருகே நிலத்தகராறில் விவசாயி அடித்துக்கொலை!!
செஞ்சியை அடுத்த குறிஞ்சிப்பை கிராமத்தை சேர்ந்தவர் ஏ.ஏழுமலை (வயது 70). அதே ஊரில் வசிப்பவர் கே.ஏழுமலை. விவசாயிகள்.
இவர்கள் 2 பேருக்கும் அதே பகுதியில் அடுத்தடுத்து நிலம் உள்ளது. இந்த நிலங்களுக்கு நடந்து செல்லும் வரப்பு தொடர்பாக இவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.
நேற்று இவர்கள் 2 பேருக்கும் இடையே மீண்டும் நிலத்தகராறு ஏற்பட்டது. இதனையறிந்த கே.ஏழுமலையின் மருமகன் சக்திவேல் ஆத்திரமடைந்தார். அவர், ஊனமுற்றோர் பயன்படுத்தும் ஊன்று கோலால் ஏ.ஏழுமலையை சரமாரியாக தாக்கினார்.
இதனையறிந்த ஏ.ஏழுமலையின் மகன் பச்சையப்பன் (30) தடுக்க முயன்றார். உடனே அந்த வாலிபரையும் சக்திவேல் மாறி, மாறி தாக்கினார். இதில் படுகாயமடைந்த ஏ.ஏழுமலையும், பச்சையப்பனும் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் 2 பேருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சையளித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி நள்ளிரவில் ஏ.எழுமலை பரிதாபமாக இறந்தார். பச்சையப்பனுக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
கொலை செய்யப்பட்ட ஏ.ஏழுமலையின் உடலை கண்டு குடும்பத்தினர், உறவினர்கள் கதறி அழுதது பரிதாபத்தை ஏற்படுத்தியது.
இதுபற்றி தகவல் அறிந்தவுடன் செஞ்சி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் இளங்கோ, தனிபிரிவு சப்–இன்ஸ்பெக்டர்கள் ரவி, அக்தர்பாஷா மற்றும் போலீசார் குறிஞ்சிப்பை கிராமத்துக்கு விரைந்து சென்றனர். கொலை செய்யப்பட்ட ஏ.ஏழுமலையின் உறவினர்கள் எதிர்தரப்பை சேர்ந்தவர்கள் உள்பட அப்பகுதியினரிடம் விசாரணை நடத்தினர்.
ஏ.ஏழுமலை கொலை தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து சக்திவேலை கைது செய்தனர்.
நிலத்தகராறில் விவசாயி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொலை செய்யப்பட்ட ஏ.ஏழுமலைக்கு பவுனாம்பாள் என்ற மனைவியும், பவுனாம்பாள், வேண்டாமிர்தம் என்ற 2 மகள்களும் உள்ளனர்.
Average Rating