பெண்களை கிண்டல் செய்ததை தட்டிக்கேட்ட ராணுவ வீரர் மீது தாக்குதல்: 2 கேரள ரவுடிகள் கைது!!
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள பாறசாலையில் ரெயில் நிலையம் உள்ளது.
இங்கு பயணிகள் வெளியேறும் பாதை அருகே குடிமகன்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அருகில் உள்ள மதுக்கடையில் மது அருந்தி விட்டு வரும் குடிமகன்கள் பெண் பயணிகளிடம் அத்துமீறும் சம்பவங்களும், அடிக்கடி அரங்கேறி வருகிறது.
இந்த நிலையில் நேற்றும் சிலர் குடிபோதையில் பெண் பயணிகளிடம் கேலி–கிண்டலில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக குமரி மாவட்டம் நித்திரவிளையை சேர்ந்த ராணுவ வீரர் ஜேக்கப் ராஜ் (வயது 30) வந்தார். அவர், அதை தட்டிக்கேட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் அவரை சரமாரியாக தாக்கினார்கள். கல்லாலும் தலையில் அடித்தனர். இதை தட்டிக்கேட்ட சில பயணிகளும் தாக்கப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
இந்த தகவல் கிடைத்ததும், பாறசாலை போலீசாரும், ரெயில்வே போலீசாரும் அங்கு விரைந்து சென்றனர். குடிபோதையில் அட்டகாசத்தில் ஈடுபட்ட ஆற்றுக்கால் காரமனையை சேர்ந்த மனோகரன், சேது கிருஷ்ணகுமார் ஆகியோரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
விசாரணையில், அவர்கள் பிரபல ரவுடிகள் என்பதும், தலைமறைவாக திரிந்த குற்றவாளிகள் என்பதும் தெரியவந்தது. இதை தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய அவர்களது கூட்டாளிகள் 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
Average Rating