ஈரோட்டில் ரெயிலில் இருந்து இறங்கிய ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் மாயம்!!
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன் (வயது 67). ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். இவருக்கு ராஜா என்ற மகனும், ராஜேஸ்வரி என்ற மகளும் உள்ளனர்.
ராஜா பெங்களூரில் உள்ள எச்.சி.எல். நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக உள்ளார். இந்த நிலையில் பெங்களூரில் தங்கி இருக்கும் மகனை பார்ப்பதற்காக ஜெகநாதன் தனது மனைவி மணிமேகலையுடன் மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்றார். கும்பகோணத்தில் இருவரும் ஏறினர்.
நள்ளிரவு 12.30 மணிக்கு அந்த ரெயில் ஈரோடு ரெயில்நிலையம் வந்தது. அப்போது பிளாட்பாரத்தில் இறங்கிய ஜெகநாதன் மீண்டும் ரெயிலுக்கு வரவில்லை. அங்கிருந்து மாயமானார். அதிர்ச்சி அடைந்த மனைவி மணிமேகலை இதுபற்றி ஈரோடு ரெயில்வே போலீசில் புகார் செய்தார்.
போலீசார் பல்வேறு இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் ராமன் வழக்குப்பதிவு செய்துள்ளார்.
ஜெகநாதனுக்கு தூக்கத்தில் நடக்கும் வியாதியும், ஞாபகமறதியும் இருப்பதாக தெரிகிறது. இதனால் அவர் வேறு எங்காவது சென்றிருக்கலாம் என கருதப்படுகிறது. ரெயில் நிலையத்தில் இறங்கிய பயணி திடீரென மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Average Rating