புதுப்பேட்டை போலீஸ் குடியிருப்பில் ஆண் பிணம்: அழுகிய நிலையில் கிடந்தது!!
புதுப்பேட்டையில் ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பு உள்ளது. இங்குள்ள 3 மாடி குடியிருப்பில் கீழ் தளத்தில் உள்ள ஒரு வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியது.
இது குறித்து எழும்பூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார், அந்த வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். அவரது உடல் மிகவும் அழுகிய நிலையில் கிடந்தது. உடலை கைப்பற்றிய போலீசார் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பிணமாக கிடந்தவர் யார்? என்று போலீசார் விசாரணை நடத்தினர். அந்த வீடு யாருக்கு ஒதுக்கப்பட்டது என்று விசாரித்த போது, ஐஸ்அவுஸ் போலீஸ் நிலையத்தில் சட்டம்–ஒழுங்கு பிரிவில் வேலை பார்த்த போலீஸ்காரரர் நந்தகுமார் என்பவருக்கு ஒதுக்கப்பட்டது என தெரியவந்தது.
நந்தகுமார் கடந்த 1–1–2014 முதல் பணிக்கு வரவில்லை என்பதும், அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருப்பதும், அவரது சொந்த ஊர் கோவை என்பதும் தெரிய வந்தது.
போலீஸ் குடியிருப்பு வாசிகளிடம் கேட்ட போது, அந்த வீட்டில் பாஸ்கர் என்பவர் அடிக்கடி வந்து தங்குவார் என்றும், தான் நந்தகுமாரின் மாமா என்றும் கூறுவார் என அவர்கள் தெரிவித்தனர்.
இதனால் பிணமாக கிடந்தவர் யார் என்று குழப்பம் நீடிக்கிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating