எழும்பூர் கொலையில் துப்பு துலங்கியது: கணவரை கொன்ற ரவுடியை தீர்த்துக் கட்டிய மனைவி கைது!!
எழும்பூர் ஆல்பர்ட் தியேட்டர் அருகில் கடந்த 9–ந்தேதி டி.வி.செந்தில் (45) என்ற ரவுடி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தான். ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகரை சேர்ந்த இவன் மீது சென்னை தொலைக்காட்சி ஒளிபரப்பு கோபுரத்துக்கு குண்டு வைத்தது உள்பட பல கொலை வழக்குகள் உள்ளன.
இது தொடர்பாக குண்டர் சட்டத்தில் கைதாகி சிறை சென்றான். சில நாட்களுக்கு முன்பு விடுதலையானான். சம்பவத்தன்று இரவு எழும்பூர் வந்து மது அருந்தினான். அப்போது அவனை 7 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டி கொலை செய்தது.
எப்போதும் மக்கள் நடமாட்டம் நிறைந்த இந்த பகுதியில் நடந்த கொலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
போலீசார் விசாரணை நடத்தி கொலை தொடர்பாக சரவணன் உள்பட 9 பேர் கைது செய்தனர். அவர்கள் கூலிப்படையை சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்தது.
கடந்த ஆண்டு ஆதம்பாக்கத்தை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் ஏழுமலை கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் செந்தில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டு இருந்தார். கணவரை கொன்ற செந்திலை பழிக்கு பழிவாங்க மனைவி கவிதா (40) திட்டமிட்டார். இதற்காக கூலிப்படைக்கு ரூ.10 லட்சம் பேசி ரவுடி செந்திலை தீர்த்துக்கட்ட ஏவினார். முன் பணமாக ரூ.2 லட்சம் வழங்கப்பட்டது.
கூலிப்படையினர் அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் போலீசார் கவிதாவை கைது செய்தனர்.
Average Rating